எனக்கு இதுவே போதும்.. இப்படியே இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்.. மனம் திறந்த ரவி மோகன்
சென்னை: நடிகர் ரவி மோகன் கடைசியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார். அந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க; ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருந்தார். படத்துக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீனி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவி மோகன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கு படத்தின் ரீமேக்காக அது அமைந்தாலும் முதல் படமே மெகா ஹிட்டானதாலும்; ரவியின் நடிப்பும் மிக அருமையாக இருந்ததாலும் அவருக்கு நல்லதொரு அடையாளம் கிடைத்தது.அந்தப் படத்துக்கு பிறகு தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ரவி நடித்தது பெரும்பாலும் ரீமேக் படங்கள்தான். அந்தப் படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே நல்ல நடிகர், ராசியான நடிகர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.

தான் உண்டு தனது வேலையுண்டு: ரவியை பொறுத்தவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தவர். முக்கியமாக தன்னுடைய சக நடிகர்களுடன் ஈகோ பார்க்காமல் பழகக்கூடியவர். அதனை விக்ரம், கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்டோர் பல மேடைகளில் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ரவியை பார்க்கும்போது தங்கள் வீட்டு பிள்ளை போல் இருக்கிறார் என்று ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் சொல்வதுண்டு. அந்த ஒரு இமேஜும் ரவியின் வெற்றிக்கு காரணமாக திரைத்துறையினரால் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து செய்த ரவி: அவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முதலில் அந்தக் காதலுக்கு ரவியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் நடிகை குஷ்பூதான் ரவியின் வீட்டில் பேசி சம்மதிக்க வைத்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில் ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் ரவி அறிவித்தார். தற்போது அவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவிருக்கிறது.
என்ன காரணம்?: ஆர்த்தியை ரவி பிரிய பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக தான் சுத்தமாக மதிக்கப்படவே இல்லை என்று ரவியே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய உடைமைகளை ஆர்த்தி வீட்டிலிருந்து மீட்டு தருமாறு காவல் துறையில் புகாரும் அளித்திருந்தார். இதற்கிடையே அவர் கெனிஷா என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை. இதற்கிடையே இனி தன்னை யாரும் ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் ரவி மோகன் என்று அழைக்குமாறும் ரசிகர்களிடம் வேண்டுகோளும் வைத்தார்.
ரவி மோகன் பேச்சு: அவரது நடிப்பில் அடுத்ததாக ஜீனி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அவர். அப்போது பேசிய ரவி, "பல அரசியவாதிகள் இங்கே இருக்கிறார்கள். அதேபோல் பல நடிகர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருக்கிறார்கள். ஆனால் எப்போதும் நான் நடிகனாக இருக்க மட்டும்தான் ஆசைப்படுகிறேன். எனக்கு இதுவே போதுமானது" என்றார். அவரது இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்கள் ரவி யாரை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் என்று கேள்விகள் எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











