Real Thug: மாதம் 3 ரூபாய் தான் சம்பளம்.. எம்ஜிஆருக்கே நோட்டீஸ் அனுப்பிய ’தக் லைஃப்’ சின்னப்பா தேவர்!
சென்னை: எம்ஜிஆரையே துப்பாக்கியால் சுட்டு பெரிய பிரசனையை சமாளித்த 'தக் லைஃப்' நடிகரான எம்.ஆர். ராதா பற்றியும் அதற்கு என்ன காரணம் என்றும் பலருக்கும் தெரிந்திருக்கும். வெறும் மாதம் 3 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு காபி ஷாப்பில் வேலை பார்த்த சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்தும் முதல் படத்திலேயே எம்ஜிஆருடன் முட்டிக் கொண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி 'தக் லைஃப்' கொடுத்த கதையை தான் இங்கே அலச போகிறோம்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட தக் லைஃப் பிரபலங்கள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர்களில், முக்கியமானவர்கள் குறித்தும் அவர்கள் பண்ண அந்த தரமான 'தக் லைஃப்' சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற முயற்சியில் மணிரத்னத்திடம் இருந்து ஆரம்பித்தோம். அடுத்ததாக சாண்டோ சின்னப்பா தேவரின் தக் லைஃப் சம்பவத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சின்னப்பா தேவர் சம்பளம்: கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்த சின்னாப்பா தேவர் சென்னையில் ஒரு காபி கடையில் மாதம் 3 ரூபாய்க்கு வேலை பார்த்துள்ளார். அதன் பின்னர், இரும்பு அடிக்கும் கடையில் மாதம் 9 ரூபாய்க்கு வேலை பார்த்தார். அண்ணன் சுப்பையாவுடன் இணைந்து உடற்பயிற்சி எல்லாம் செய்து கட்டுக்கோப்பாக இருந்த தேவருக்கு 1940ம் ஆண்டு வெளியான 'திலோத்தமா' படத்தில் சண்டை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், பல படங்களில் சண்டைக் காட்சிகளிலும் சில முக்கிய வேடங்களிலும் நடித்து பிரபலமானார். 3 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்த சின்னப்பா தேவர் சோடா கடை, பால் வியாபாரம் என சினிமாவில் இருந்து தனக்குக் கிடைத்த சம்பளத்தை வைத்து பிசினஸை ஆரம்பித்து தயாரிப்பாளர் அந்தஸ்த்துக்கு உயர்ந்தார்.
எம்ஜிஆரை வைத்து 16 படங்கள்: எம்ஜிஆர் நடித்த சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சின்னப்பா தேவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. முருகன் பெயரில் ஏகப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த நிலையில், முருக பக்தரான சின்னப்பா தேவர் கடைசியாக தேவர் பிலிம்ஸ் என்றே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதல் படத்திலேயே எம்ஜிஆரை வைத்து 1956ம் ஆண்டு 'தாய்க்குப்பின் தாரம்' படத்தை தயாரித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், இருவருக்கும் இடையே சில பிரச்னைகள் வெடித்தன. ஆனால், மீண்டும் இருவரும் இணைந்து தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனையன், குடும்ப தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், விவசாயி, காதல் வாகன், நல்ல நேரம் என பல வெற்றிப் படங்களில் இருவரும் இணைந்தனர்.
படங்களில் மிருகங்களை வைத்து: தேவர் பிலிம்ஸ் என்றாலே ரசிகர்கள் நினைவுக்கு சட்டென நினைவுக்கு வருவது அவரது படங்களில் இடம்பெறும் மிருகங்கள் தொடர்பான காட்சிகள் தான். நல்ல நேரம் படத்தில் யானைகளை வைத்து நடிக்க வைத்திருப்பார். எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டை போடுவது, புலியுடன் சண்டை போடும் காட்சிகள், வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறும் மிருகங்கள் தொடர்பான காட்சிகள் என அனைத்துமே சாண்டோ சின்னப்பா தேவரின் கை வண்ணம் தான். மக்களுக்கும் அந்த காட்சிகளை பார்க்க ரொம்பவே பிடித்துப் போக ஒவ்வொரு படங்களும் 100 நாட்களை கடந்து ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தன.

சிவாஜியுடன் படமே பண்ணக்கூடாது: பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையால் எம்ஜிஆருக்கு போட்டியாக முளைத்து வருவதை அறிந்த எம்ஜிஆர் ஆரம்ப காலக்கட்டத்தில் கூண்டுக்கிளி உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிவாஜியுடன் நடித்திருந்தார். சிவாஜி கணேசனின் வளர்ச்சி இன்னும் பெரிதாக இருக்கும் என்பதை அறிந்துக் கொண்ட அவர், தேவர் பிலிம்ஸில் சிவாஜியை வைத்து படம் எடுக்கக் கூடாது என சின்னப்பா தேவரை லாக் செய்ய அவரும் வாக்கு கொடுத்துவிட்டார். அதன் காரணமாகவே தேவர் பிலிம்ஸில் சிவாஜி கணேசன் நடிக்கவில்லை என்கின்றனர்.
எம்ஜிஆருக்கு நோட்டீஸ்: சின்னப்பா தேவருடன் நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில் தான் எம்ஜிஆர் தனது கால்ஷீட்டை கொடுத்து ஆரம்பத்தில் சின்னப்பா தேவரை தயாரிப்பாளராக மாற்றினார். தாய்க்குப்பின் தாரம் படத்தில் இடம்பெற்ற காளை அடக்கும் காட்சியில் நடிக்க எம்ஜிஆர் தொடர்ந்து கால தாமதம் செய்து வந்த நிலையில், கடுப்பான தேவர் டூப் போட்டு அந்த சீனை எடுத்து படத்தையும் ரிலீஸ் செய்தார். அதன் பின்னர், தெலுங்கில் ரைட்ஸ் கேட்டு ஒரு கம்பெனி வர அதன் உரிமையை விற்றுள்ளார். என்னை கேட்காமல் எப்படி உரிமையை விற்றீர்கள் எனக் கேட்டு எம்ஜிஆர் நோட்டீஸ் அனுப்ப, நீங்கள் நடிக்காமல் டூப் போட்டு அந்த ஜல்லிக்கட்டு சீன் படமாக்கப்பட்டது. நீங்கள் நடித்திருந்தால் மேலும், வசூல் வந்திருக்கும். அதற்கு நஷ்ட ஈடு நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என பதிலுக்கு சின்னப்பா தேவர் எம்ஜிஆருக்கே நோட்டீஸ் அனுப்ப, அப்படியே அந்த விஷயத்தை இருவரும் பேசி தீர்த்துக் கொண்டதாக கூறுகின்றனர்.
தீவிர முருக பக்தர்: சாண்டோ சின்னப்பா தேவர் என்றாலே திரையுலகமே கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு நெற்றியிலும் நெஞ்சினிலும் திருநீரை அள்ளி பூசிக் கொண்டு எப்போதும் காட்சி தருவார். ஆரம்பத்தில் தேவர் பிலிம்ஸ் என வேறு வழியில்லாமல் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்தாலும், அதன் பின்னர், தண்டாயுத பாணி பிலிம்ஸ் என பெயரை மாற்றி பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். 1978ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம் படம் தான் தேவர் கடைசியாக தயாரித்த படம். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் ஆர். தியாகராஜன் படங்களை தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் பேனரிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.
நிறைவேறாத ஆசை: எம்ஜிஆர் உடன் ஆரம்பத்தில் மோதல் ஏற்பட்டாலும் அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு தமிழ் சினிமாவில் எந்தவொரு சக்தியாலும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. எம்ஜிஆரை வைத்து எப்படியாவது முருகன் படம் எடுத்துவிட வேண்டும் என நினைத்து படத்தையும் தொடங்கிய தேவரால் அந்த படத்தை முடிக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











