விக்ரமின் வீர தீர சூரன்.. எஸ்.ஜே.சூர்யாவின் புகழ்ச்சி.. செம சம்பவம் காத்திருக்குபோல
சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் படம் பற்றி எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கிறார்.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களிலும் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
விரைவில் ரிலீஸ்: முதலில் தங்கலான் படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வீர தீர சூரன்: அடுத்ததாக அவர் சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக விக்ரமுக்கு கம்பேக்காக அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.
சூர்யாவின் பேட்டி: இந்நிலையில் படம் பற்றி எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "வீர தீர சூரன் படத்தில் எனக்கும் விக்ரமுக்கும், சிராஜுக்கும் இடையே ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சியை மதுரையில் அருண்குமார் படமாக்கினார். அதற்கு முன்னதாக தனது டீமை அங்கு அழைத்து சென்று 10 நாட்கள் ஒத்திகை பார்த்தார். எங்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தார். பிறகு ஷூட் செய்தார். இன்று (நேற்று) அதிகாலை 5 மணிக்கு அவர் நினைத்ததை கொண்டுவந்துவிட்டார். அவரைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அவர் கலைத்தாயின் இளைய மகன்" என்றார்.


Click it and Unblock the Notifications











