ஹலோ விஜய்.. முதல் மீட்டிங்கிலேயே பெயர் சொல்லி கூப்பிட்ட இயக்குநர்.. தளபதி ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இதன் காரணமாக அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அப்படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. மறுபக்கம் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் அவர் மீட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் விஜய் குறித்து சச்சின் இயக்குநர் ஜான் மகேந்திரன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை வெங்கட் உருவாக்கியிருந்தாலும் பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை. முக்கியமாக திரைக்கதையில் பெரிய ஓட்டை இருந்ததாகவும்; மேக்கிங்கில் எந்தவிதமான புதுமையும் இல்லை என்று ஓபனாகவே பேசினார்கள் ரசிகர்கள்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அதற்கான முழு பணிகளில் அவர் இறங்கிவிட்டார். இதன் காரணமாக விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன்: விஜய் கடைசியாக நடிக்கும் படம் என்று கூறப்படும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகிவரும் இப்படத்திலிருந்து; இரண்டு போஸ்டர்கள் கடந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் கையில் சாட்டையோடும், மறு போஸ்டரில் செல்ஃபி எடுக்கும்படியும் இருந்தார் விஜய். அதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் அரசியல் ரீதியாக இருக்கும் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

சச்சின் விஜய்: இதற்கிடையே இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் நடித்திருந்தார் விஜய். அவருடன் ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். படம் இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக சச்சின் படத்தில் விஜய் அவ்வளவு க்யூட்டாக இருப்பார் என்று அவரது ரசிகர்கள் சொல்வதுண்டு. அந்தப் படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளரும் அறிவித்திருக்கிறார். படம் அருமையாக இருந்தாலும் அந்த சமயத்தில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இயக்குநர் ஜான் மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ஜான் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "விஜய்யிடம் சச்சின் கதையை சொல்வதற்காக என்னை ஒருவர் அழைத்து சென்றார். அங்கு சென்றதும் ஹலோ விஜய் என்று சொல்லி கை கொடுத்தேன். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. உடனே இன்னொரு ரூமுக்கு சென்றார். அப்போது என்னை அழைத்து சென்ற நபர்; எப்படி நீங்கள் அவரது பெயரை சொல்லலாம்; கையை கொடுக்கலாம் என்று கேட்டார். ஃபோனை பேசிவிட்டு விஜய் வந்த பிறகு, நான் உங்களை பெயர் சொல்லி கூப்பிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவரோ, தாராளமா கூப்பிடுங்கள் சார் என கூறிவிட்டார்" என்றார்.



Click it and Unblock the Notifications











