சாரி சார்.. விக்ரம் படத்தை நிராகரித்த முன்னணி நடிகை?.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் திரைப்படம் வெளியானது. அப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக பா.இரஞ்சித் கதையை சொல்லிய விதத்தில் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் விக்ரம்; அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்திய சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல வருடங்கள் சினிமாவில் கஷ்டப்பட்ட அவருக்கு பாலா இயக்கிய சேது திரைப்படம்தான் வாழ்க்கை கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு பட்டித்தொட்டியெங்கும் தெரிய ஆரம்பித்த விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் வெரைட்டி காண்பித்து நடித்தார். அதாவது ஒருபக்கம் தில், தூள், ஜெமினி, சாமி என கமர்ஷியல் படங்களையும் மறுபக்கம் காசி, பிதாமகன் போன்று நடிப்புக்கு தீனி போடும் படங்களையும் செய்தார்.

மிகச்சிறந்த நடிகர்: இப்படி ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் லாவகமாக சவாரி செய்து தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற நிலைக்கு நகர்த்திக்கொண்டார். பிதாமகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் அவர் வென்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விக்ரமுக்கு சரியான அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதுதான் அவருடைய ரசிகர்களின் குறையாக இருந்துவருகிறது. கடைசியாக அவர் சோலோ ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
தங்கலான்: அந்தக் குறையை பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் தீர்த்து வைக்கும் சியானின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ற உழைப்பைத்தான் விக்ரமும் அந்தப் படத்தில் போட்டிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பா.இரஞ்சித் தன்னுடைய கதை சொல்லும் பாணியை கொஞ்சம் மாற்றி இன்னமும் எளிமையாக்கியிருந்தால் அந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதுதான் பலரது கருத்து. அதேசமயம் விக்ரமின் நடிப்பு வழக்கம் போல் மிரட்டலாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள்.
சித்தா இயக்குநருடன்: தங்கலான் படத்தில் நடித்து முடித்த விக்ரம் அடுத்ததாக சித்தா படத்தை இயக்கி பெரும் கவனத்தை ஈர்த்த அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில்தான் படத்தின் டீசர் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படமானது இந்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

மறுத்துவிட்ட சாய் பல்லவி?: இந்தப் படத்துக்கு பிறகு மண்டேலா, மாவீரன் படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் ஹீரோயினாக நடிப்பதற்கு சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; ஆனால் தன்னிடம் கால்ஷீட் இல்லாததால் சாரி சார் என்ற பதில்தான் அவரிடமிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











