நடிகர் சல்மானுக்கு எதிராக சாட்சி கூறியவரை ரூ. 5 லட்சத்தை வாங்கிக்கிட்டு ஓடிப் போக மிரட்டல்
மும்பை: நடிகர் சல்மான் கான் வேகமாக காரை ஓட்டிச் சென்று சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது மோதி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து விலகிக் கொள்ள தனக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் தருவதாகக் கூறினர் என்று சாட்சியங்களில் ஒருவரான முஸ்லிம் ஷேக் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி அருகே சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது தனது டொயோட்டா லேண்ட் க்ரூசர் காரை ஏற்றினார். இதில் ஒருவர் பலியானார்.

இந்த வழக்கில் சல்மான் கான் கார் ஏற்றியதால் காயம் அடைந்த முஸ்லிம் ஷேக், மன்னு கான் மற்றும் கலிம் முகமது ஷேக் ஆகியோர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தங்கள் மீது ஏறிய காரை சல்மான் கான் தான் ஓட்டி வந்தார் என்று அவர்கள் தெளிவாகக் கூறினர்.
இந்நிலையில் சாட்சியங்களில் ஒருவரான முஸ்லிம் ஷேக் கூறுகையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு எனக்கு ஒரு போன் வந்தது. வழக்கறிஞர் முகேஷ் பாண்டே என்பவர் ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வராமல் ஓடிவிடு என்று மிரட்டினார். இதற்கு முன்பாக எனக்கு போன் மூலம் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதை எல்லாம் தாண்டி தான் நான் நீதிமன்றத்தில் சல்மானுக்கு எதிராக சாட்சியம் அளித்தேன் என்றார்.
ஏற்கனவே சல்மானுக்கு எதிராக 3 பேர் சாட்சியம் அளித்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை நிச்சயம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லஞ்சம், கொலை மிரட்டல் என்று அடுத்தடுத்து பிரச்சனைகளில் அவர் சிக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











