"காரை ஓட்டியது சல்மானா என்று தெளிவாக தெரியவில்லை"… கார் விபத்து வழக்கில் திடீர் திருப்பம்!
மும்பை: விபத்து நடைபெற்ற போது சல்மான் கான் தான் காரை ஓட்டிவந்தாரா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் தனக்கு தெளிவாக தெரியவில்லை என்று மும்பை நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் பட உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று 5 பேர் மீது ஏற்றினார். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கான் மீது போதையில் கார் ஓட்டியது, கார் ஓட்டி ஒருவரை கொன்றது போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

முக்கிய சாட்சியம்
இந்த வழக்கில் இன்று ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விபத்து நடைபெற்ற பகுதியின் அருகில் பால் கடை வைத்திருந்த ரமேஷ்ராய் பாண்டே என்ற அவர், சல்மான் கான் தான் காரை ஓட்டிவந்தாரா என்பதை உறுதியாக கூற முடியவில்லை என்றார்.

யாரையும் பார்க்கவில்லை
பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் தனக்கு தெளிவாக தெரியவில்லை என்று கூறினார். மேலும், சல்மான்கான் காரில் இருந்து விழுந்து கிடக்கும் போது, காரின் முன் இருக்கையில் நான் யாரையும் பார்க்கவில்லை. டிரைவர் இருக்கும் பகுதியில் உள்ள கதவு ஏற்கனவே திறந்தே இருந்தது என்றும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

குடிபோதையில் சல்மான்கான்
முன்னதாக, கடந்த மே 6 ஆம் தேதி இந்த வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த போது, இரண்டுபேர் பேர் அவருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளனர். அதில், சல்மான் கான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததாகவும் விபத்து ஏற்படுத்தியவுடன் முதலில் கீழே விழுந்து கிடந்த அவர் பின்னர் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மிரட்டல் புகார்
விபத்தில் காயம் அடைந்து இருந்த மற்றொருவர் அளித்த சாட்சியத்தில், விபத்து ஏற்பட்டவுடன், சல்மான்கான் டிரைவர் இருக்கும் பகுதியில் இருந்து விழுந்து கிடந்ததை நான் பார்த்தேன் என்று கூறியிருந்தார். இதில் ஒரு சாட்சியம் தனக்கு மிரட்டல் வருபதாகவும் போலீசிடம் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்புவாரா சல்மான்கான்
சல்மான்கானுக்கு எதிராக இருவர் சாட்சியம் அளித்த நிலையில் இன்றைய சாட்சி சல்மான்கானுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. எனினும் 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் இருந்து சல்மான்கான் தப்புவாரா? அல்லது சிறை செல்வாரா என்பது வெகு விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications