கொரோனால் பாதிப்பு... சினிமா தொழிலாளர்களுக்கு உதவி... பாலிவுட் சூப்பர் ஸ்டாரை பாராட்டும் ரசிகர்கள்!
மும்பை: சினிமா தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக, பாலிவுட் ஹீரோ சல்மான்கான் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

உலக நாடுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா தொழிலாளர்கள்
இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் உட்பட அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சினிமா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்நிலையில் அவர்ளுக்கு உதவுவதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

சல்மான் கான்
இதை இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, சல்மான் தனது பீயிங் ஹ்யூமன் (Being human) அறக்கட்டளை மூலம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். எங்கள் அமைப்பில் 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதில் தற்போது, 25,000 பேருக்கு பண உதவிகளை செய்து தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

ஊரடங்கு
மற்ற தொழிலாளர்கள் இன்னும் ஒரு மாதத்துக்குத் தாக்குப்பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் எங்களிடம் இருக்கிறது. ஊரடங்கு காரணமாக அவர்களால் அவற்றை பெற்றுச் செல்ல முடியவில்லை. அதை அவர்களிடம் சேர்ப்பிப்பது குறித்து யோசித்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார். சல்மான் கானின் இந்த செயலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











