என்கவுன்டர் கதைக்கு தலைப்பு 'வேளச்சேரி'... மீண்டும் ஹீரோவாகும் சரத்குமார்!
சென்னை: வேளச்சேரியில் நடந்த ஒரு என்கவுன்டர் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்துக்கு வேளச்சேரி என்று தலைப்பிட்டுள்ளனர். இதில் நீண்ட நாள் கழித்து ஹீரோவாக நடிக்கிறார் சரத்குமார்.
சமீபத்தில் வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட சிலரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

வேந்தன்
இந்த சம்பவத்தை வேளச்சேரி என்ற தலைப்பிலேயே படமாக்குகிறார் புதிய இயக்குநர் வேந்தன். உண்மை சம்பவத்தை எந்த வகையிலும் மாற்றாமல் எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஹீரோ
இந்தப் படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது. இடைப்பட்ட காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் அவர் நடித்ததெல்லாம் குணச்சித்திர வேடங்கள் அல்லது கெஸ்ட் ரோல்கள் மட்டும்தான்.

இனியா ஜோடி
சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா. அவரும் எத்தனை நாள்தான் இளம் ஹீரோக்களுக்காகக் காத்திருப்பார்... மாசாணி படத்தில் ராம்கிக்கு ஜோடியானவர், இந்தப் படத்தில் ராம்கியின் சகலையான சரத்குமாருக்கு ஜோடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார்
இந்தப் படம் பற்றி சரத்குமார் கூறும்போது, "கொஞ்ச நாள் சில துணை கதாபாத்திரங்களில் நடித்தேன். ஆனால் ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து போரடித்துவிட்டது. ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். வேளச்சேரி ஒரு நல்ல திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் அதனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை," என்றார்.

கதை என்ன?
வெறும் என்கவுன்ட்டர் மட்டுமே கதையல்ல. இந்த என்கவுன்ட்டர்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற இன்னொரு பக்கத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











