Sarathkumar: 500 கோடியில் வீடா.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்!
சென்னை: சென்னையில் இன்று "நம்பிக்கை" இணையத்தள ஊடகம் துபாய், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் லான்ச் செய்யப்பட்டது. இந்த தொடக்க விழாவில் டத்தோ சரவணன், சீமான், அன்பில் மகேஷ், ராதிகா சரத்குமார் என பலர் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், பத்திரிகை துறைக்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பத்திரிகைகளை தெருத்தெருவாக சென்று விநியோகம் செய்த ஒரு சைக்கிள் பையன் என்பதால் பத்திரிகைக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. முன்பெல்லாம் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீசுக்கு சென்று தான் சொல்ல வேண்டும். அங்கு நம்மை போல பலர் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள் அந்த வேலையையும் நான் செய்திருக்கிறேன். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒரு பத்திரிகை இருக்க வேண்டும்.

நடிகர் சரத்குமார்: உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பத்திரிகைகள் இருக்க வேண்டும், ஊடகங்கள் இருக்க வேண்டும், தொலைக்காட்சிகள் இருக்க வேண்டும். ஒரு சாதாரண செய்தியை மிகைப்படுத்தி சொல்லும்போது அது திசை திரும்பி வேறு எங்கோ சென்று விடுகிறது. அப்படிப்பட்ட காலத்தில் தான் நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் ஒரு செய்தி உண்மையா? இல்லையா? என்பதை புரிந்து கொள்வதிலேயே குழப்பமாக இருக்கிறது.
500 கோடியில் வீடா?: காலையில் ஒருவர் என்னிடம் 500 கோடி ரூபாய் வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு சென்று விட்டீர்களா என்று கேட்டார். அந்த கேள்வியை அவர் கேட்டதும், எந்த செய்தியில் பார்த்தீர்கள் என்று கேட்டேன். அவர் ஊடகத்தில் பார்த்ததாக கூறினார். நான் அவரிடம், ஐயா என்னிடம் 500 கோடி இருந்தால், பத்து கோடியில் வீட்டை கட்டிவிட்டு மீதி பணத்தை பேங்கில் போட்டுவிட்டு ஜாலியாக வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருந்திருப்பேன் என்றேன். இதை இங்கு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால், வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த செய்தியை பார்க்கும்போது, சரத்குமாரும் ஹாலிவுட் நடிகர்களைப் போல 500 கோடிக்கு வீடு கட்டி இருக்கிறார் என நினைத்து விடுவார்கள். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் உண்மையை உண்மையாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன்.
ஒரு செய்தியை சொல்லும்போது அதில், நன்மகத் தன்மை இருக்க வேண்டும். ஒரு செய்தியாளர் செய்தி எழுதுவதற்கு முன், கேள்வி கேட்பதற்கு முன் அந்த செய்தியை பற்றி அவர் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியிருக்கிறார். இந்த 'நம்பிக்கை' ஊடக தொடக்க விழாவில் டத்தோ சரவணன், சீமான், அன்பில் மகேஷ், ராதிகா சரத்குமார் என பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











