விஜய் அடிக்கடி சினிமாவில் நடிக்க வேண்டும்.. சசிகுமாரின் ஆசை.. நிறைவேற்றுவாரா தளபதி?
சென்னை: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடவிருக்கிறது. அரசியலில் முழு கவனமும் செலுத்திவருவதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்க; பாபி தியோல் வில்லன் ரோலை ஏற்றிருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடியில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் அவர். அவரது அரசியல் வருகை அவரின் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்தாலும் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தனது கடைசி படமாக தளபதி 69ல் நடித்துவருகிறார். படத்துக்கு ஜனநாயகன் அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். படமானது அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் அவரது கடைசி படம் என்பதால் இதன் மீது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம்: ஒருபக்கம் கடைசி படத்தில் நடித்துவரும் அவர்; மறுபக்கம் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் அரசியல் மேடைகளில் முழு மூச்சாக செயலாற்றிவருகிறார். முதலில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்திய அவர் தனது அரசியல் எதிரி திமுகவும் பாஜகவும் என்று முழங்கினார். அன்றிலிருந்து விஜய்யையும், அவரது அரசியல் செயல்பாட்டினையும் திமுகவினர் மிக கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். அதற்கு தவெகவினரும் கடுமையான பதிலடியை கொடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விசிக Vs தவெக: அடுத்ததாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு; இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாக மீண்டும் திமுகவை சாடினார். ஆனால் தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை; விஜய்க்கு தன்னை சுற்றித்தான் மனம் இருந்திருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் ஓபனாக பேசினார். அதேபோல் விசிக எம்பி ரவிக்குமாரும் பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி ஸ்டாலினின் பெயரை ஏன் விஜய் உச்சரிப்பதே இல்லை என்று பலரும் பேசினார்கள். அதற்கும் பதிலளிக்கும் விதமாக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயரை ஓபனாகவே குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
மனைவியை பிரிந்த விஜய்?: இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்துவிட்டார்கள். சங்கீதா இந்த சண்டையின் காரணமாகத்தான் வெளிநாட்டில் இருக்கிறார். மேலும் இரண்டு பேரும் பிரிந்ததால்தான் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு சங்கீதா வரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விஷயத்தை வைத்தும் விஜய்யை திமுகவினர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதெல்லாம் சுத்த பொய் சங்கீதாவும் விஜய்யும் பிரியவெல்லாம் இல்லை என்று விஜய்யின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
ஜனநாயகன் ஷூட்டிங்: அரசியலில் முழு கவனத்தையும் அவர் திருப்பியிருப்பதால் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இப்போது படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடியில் நடந்துவருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் விஜய் அங்கு சென்றார். அப்போது மதுரையில் வைத்து செய்தியாளர்களையும் முதன்முறையாக சந்தித்தார் அவர். சூழல் இப்படி இருக்க அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் குறித்து இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
சசிகுமார் பேச்சு: திருப்பூரில் நடந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகுமார் பேசுகையில், "அனைவரது வீட்டிலும் ஃபேமிலி சப்ஜெக்ட் என்றாலே பிடிக்கும். இயக்குநர் கதையை எடுத்துக்கொண்டு வரும்போது இந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால் பெண்கள் தியேட்டர்களுக்கு வந்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன.அவர்கள்தான் படங்களை தியேட்டரில் ஓட வைத்தவர்கள். ஓடிடி வந்ததிலிருந்து அவர்கள் தியேட்டர்களுக்கே வருவதே இல்லை. இப்போது பார்க்கும்போது இவ்வளவு கூட்டம் வருகிறார்கள். அதனால் நல்ல சினிமா கொடுத்தோம் என்றால் அவர்களுக்கான சினிமா கொடுக்கும்போது கண்டிப்பாக வந்து பார்ப்பார்கள் என்பது இதன் மூலம் தியேட்டரில் பார்ப்பார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது.
சூர்யா சொன்ன வாழ்த்து: டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்தார். அது அவருடைய பெருந்தன்மை. உடனே நானும் அவரது படத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். அனைத்து படங்களும் ஓட வேண்டும். நான்கு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. நான்கு படங்களுமே ஓடினால்தான் ஆரோக்கியமாக இருக்கும். அயோத்தி, கருடன், நந்தன் என நீங்கள் எப்படி பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படித்தான் நான் கொடுக்கிறேன். அடுத்ததாக ராஜுமுருகன் இயக்கத்தில் மயிலாடு என்று ஒர் படத்தில் நடிக்கிறேன். அதற்கு அடுத்ததாக ஃப்ரீடம் என்று ஒரு படம் செய்கிறேன். நிறைய படங்கள் எனது கைவசம் இருக்கிறது.இந்த வருட கடைசியில் நான் ஒரு பீரியட் சப்ஜெக்ட்டை இயக்குகிறேன். அது ரெடியானவுடன் இயக்குநராக அவதாரம் எடுத்துவிடுவேன்.
விஜய் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம்: விஜய் கோவைக்கு வந்தபோது அவருடைய ரசிகர்கள் நடந்துகொண்டதை பற்றி ரொம்ப வருத்தமாக பேசினார். விஜய்க்கு ஆதரவு கொடுக்கிறேனா இல்லையா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. அதேபோல் யாருக்கு வாக்கு செலுத்தப்போகிறோம் என்பதை சட்டப்படி சொல்லக்கூடாதுதானே. அரசியலுக்கு வந்தது விஜய்யின் விருப்பம். அவர் வந்துவிட்டார். அவர் அரசியலுக்கு வந்துவிட்டாலும் சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவர் ஒரு மிகச்சிறந்த என்ட்டர்டெயினர். விஜய்யின் படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். அவருடைய படத்தை நாம் கொண்டாடி பார்ப்போம். அதனால் அவர் அரசியலுக்கு வந்தாலும் விஜய் சினிமாவையும் விட்டுவிடக்கூடாது. அவர் அடிக்கடி நடிக்காவிட்டாலும் இரண்டு படங்களாவது அடிக்கடி செய்ய வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அஜித்துக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள். அவர் கார் பந்தயம் போனதற்கெல்லாம் பாராட்டு தெரிவித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











