சம்பளத்தை ஏத்த மாட்டேன்.. டூரிஸ்ட் ஃபேமிலி சக்சஸ் மீட்.. படத்தோட வசூலையும் போட்டுடைத்த சசிகுமார்!
சென்னை: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 12 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அதன் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில், கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சசிகுமார் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை ஏற்ற மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரும் அகதிகள் ஒரு வெடிகுண்டு வழக்கில் சிக்க அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்கிற சீரியஸான கதையை எந்தளவுக்கு என்டர்டெயின்மென்ட்டாக கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முடியும் என்பதை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அழகாக கையாண்டிருந்ததே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் முதல் 3 நாட்கள் மட்டுமே ஓடியதாகவும் 2 வாரத்திலும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்றும் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த் பாராட்டு: சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "சூப்பர் சூப்பர் எக்ஸ்ட்ராடினரி" என பாராட்டியதை நடிகர் சசிகுமார் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், வெற்றி விழாவில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளிப்படையாக பேசிய அவர், நடிகர்களிடம் தயாரிப்பாளர்கள் உண்மையான வசூல் நிலவரத்தை சொல்ல வேண்டும் என்றும் பேசி சில நடிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் குட்டு வைத்துள்ளார்.
சம்பளத்தை ஏத்த மாட்டேன்: டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றிப் பெற்ற நிலையில், நான் உறுதியளிக்கிறேன் கண்டிப்பா என் சம்பளத்தை உயர்த்த மாட்டேன். ஒரு சிலர் ஒரு படம் ஓடிவிட்டால் அதிரடியாக சம்பளத்தை ஏற்ற படத்தின் பட்ஜெட் அதிகரித்து விடுகிறது. அதன் பின்னர் லாபத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என யாரும் பார்க்க முடியாமல் போகின்றன. அதனால், உறுதியாக சொல்கிறேன் என்னோட சம்பளத்தை உயர்த்தமாட்டேன் என்றார்.
முதல் நாள் வசூல் மற்றும் வாழ்நாள் வசூல்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் நாள் வசூல் 2.5 கோடி வந்திருக்கும் ஹீரோக்களிடம் உண்மையான லாபத்தை சொல்லுங்கள். அப்போதுதான் அவர்கள் சம்பளத்தை உயர்த்த மாட்டார்கள் என இளம் நடிகர்கள் அதிரடியாக சம்பளத்தை உயர்த்திக் கொண்டே செல்வதால் ஏற்படும் நஷ்டத்தை வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும், தனது சில படங்களின் வாழ்நாள் வசூலே அந்த 2.5 கோடி தான். சினிமாவில் நான் பல தோல்விகளை கண்டு இருக்கிறேன். அந்த உண்மையை நான் ஒத்துக்கிறேன். அதனால், வெற்றி வந்தவுடன் உடனடியாக சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது. அடுத்தடுத்து நல்ல படங்களை பண்ண வேண்டும் என்று பேசினார்.
சிம்ரன் எல்லாம் கனவு: "வந்தது பெண்ணா வானவில் தானா என சிம்ரனை அவள் வருவாளா, துள்ளாத மனம் துள்ளும் படங்களில் எல்லாம் தியேட்டரில் பார்த்து வியந்திருக்கிறோம். அவரை அழைத்து வந்தது எல்லாம் கனவு தான். அழைத்து வந்தேன் என்று சொன்னால் வேறமாறி புரிந்துக் கொள்வார்கள். சிம்ரன் மேடம் இந்த படத்தில் நடித்துக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்றார்.


Click it and Unblock the Notifications











