சங்கடத்தில் சசிகுமார்.. கடைசி நேரத்தில் தள்ளிப்போன ப்ரீடம் ரிலீஸ்.. என்ன பிரச்சனை தெரியுமா?
சென்னை: இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10ம் தேதியே திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி வெளியிடப்பட்டது. ஆனால், நேற்று அந்த படம் வெளியாகவில்லை.
இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்னமும் படத்தை சுற்றி நிகழும் பிரச்சனை ஓயாத நிலையில், படம் இன்றும் வெளியாகாது என்றும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் திரையரங்குகளில் ப்ரீடம், ஓஹோ எந்தன் பேபி, வனிதா விஜயகுமாரின் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர், தேசிங்குராஜா 2, மாயக்கூத்து, தோற்றம் மற்றும் ஹாலிவுட் படமான சூப்பர்மேன் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகுமாரின் ஃப்ரீடம் படம் தற்போது வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ப்ரீடம் ரிலீஸ் ஆகவில்லை: ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் ராமேஸ்வரம் மண்டப பகுதியில் அகதிகளாக இருந்த ஈழத்தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் சென்று 4 வருடங்களுக்கு மேலாக சித்ரவதை செய்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க அதன் பின்னர் என்ன நடந்தது என்கிற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தை திருமாவளவன் எல்லாம் பார்த்து பாராட்டினார். ஆனால், நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் ஜூலை 11ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ப்ரீடம் படம் வெளியாகவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி நடிகருக்கா இந்த நிலைமை: இந்த ஆண்டு தமிழில் வெளியான படங்களிலேஎயே தயாரிப்பாளருக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்த படமாக மாறிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த சசிகுமாரின் அடுத்த படத்துக்கா இந்த நிலைமை என கோலிவுட்டில் பரபரப்பாக இந்த படம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. முன்னதாக சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இன்று வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீர தீர சூரன் 2ம் பாகம் திரைப்படமும் கடைசி நேர வழக்கு சிக்கல் காரணமாக காலையில் வெளியாகாமல் மாலையில் தான் வெளியானது.
என்ன பிரச்சனை: சசிகுமாரின் ப்ரீடம் படத்துக்கும் பைனான்ஸ் பிரச்சனை தான் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தை உரிய நேரத்தில் வெளியிட்டால், கட்டாயம் அந்த பிரச்சனை சரியாகிவிடும் என படக்குழு முயற்சி செய்தாலும், பைனான்ஸ் வழங்கியவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும், இன்று 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து சசிகுமாரின் ப்ரீடம் படம் சுதந்திரமாக மக்கள் பார்வைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டல்லடிக்கும் தமிழ் சினிமா: முன்னணி நடிகர்கள் படங்கள் வராமல், வாரத்துக்கு 4 முதல் 5 படங்கள் வெளியானாலும், மக்கள் அந்த படங்களை பார்க்க பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த வாரம் வெளியாகி இருக்கும் படங்கள் மீதும் பெரிதாக மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











