எம்ஜிஆருக்கு பிறகு விஜய்யிடம் அது இருக்கிறது.. சத்யராஜ் ஓபன் டாக்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று நீண்ட காலமாக பேச்சு எழுந்த சூழலில் அதனை உறுதிப்படுத்தினார். அதேசமயம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். பல நூறு கோடி ரூபாய் அவர் படங்களுக்கு வியாபாரம் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்துவந்தார். அப்போதிருந்தே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்தனர். ஆனால் விஜய்யோ வழக்கமான சைலெண்ட் மோடிலேயே இருந்தார். இதனால் வருவாரா வரமாட்டாரா என்ற குழப்பமும் அவரது ரசிகர்களுக்கு எழுந்தது.

தமிழக வெற்றிக் கழகம்: ஆனால் தன்னுடைய அமைதிக்கு பிறகு பெரும் செயல் ஒன்று இருந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். எந்தவித அலப்பறையும் படு சிம்ப்பிளாக தனது எக்ஸ் தள பக்கத்தின் மூலம் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். தங்களின் எதிர்பார்ப்பை தளபதி பூர்த்தி செய்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடைசி படம்: அரசியலில் களமிறங்கியிருப்பதால் விஜய்யின் ரசிகர்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும்; அவர் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்று தெரிவித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் விஜய் கண்டிப்பாக சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கமாட்டார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால் மீண்டும் சினிமாவில் நடிக்கத்தான் போகிறார். அதனால் யாரும் பதற்றப்பட தேவையில்லை என்பது ஒருதரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
என்ன கொள்கை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது வரவேற்பை பெற்றது போல விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது. அதாவது இப்போது கட்சியை ஆரம்பித்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு விடுமுறை கொடுத்திருப்பது விஜய் மட்டும்தான். முக்கியமாக அவர் என்ன கொள்கையை தனது கட்சியின் பிரதானமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். திராவிட கட்சிகளுடன் இணக்கமாக செல்வாரா இல்லை அந்தக் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வாரா போன்று பல கேள்விகளை இப்போதே எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.
தனித்துதான் போட்டி: சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தனித்து நின்று போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் முதல் தேர்தலில் தனித்து நின்று தனது பலம் என்ன என்பதை அறிந்துகொள்ளத்தான் விஜய் விரும்புவாரே ஒழிய கூட்டணி அமைக்க விரும்பமாட்டார் என்பதை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள்.
சத்யராஜ் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து சத்யராஜ் பேசிய பழைய பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், 'விஜய்யிடம் எப்போதும் ஒரு க்யூட்னஸ் இருக்கிறது. எம்ஜிஆருக்கு பிறகு விஜய்யிடம்தான் அதனை நான் பார்க்கிறேன். அதேபோல் 3 இடியடஸ் அமீர்கானைவிடவும், நண்பன் விஜய்யைத்தான் அதிகம் ரசித்தேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











