புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை.. பிழைப்பேனு நினைக்கல.. மனைவியிடம் சொன்ன வார்த்தை.. சிவராஜ்குமார் எமோஷனல்
சென்னை: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ்குமாருக்கு கடந்த வருடம் அமெரிக்காவில் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்தது. நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்து மீண்டும் பழையபடி ஆக்டிவ்வாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது அவர் 45 என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் உபேந்திராவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ப்ரோமோஷனில் சிவராஜ்குமார் எமோஷனலாக பேசினார்.
கன்னட திரையுலகின் முடிசூட மன்னனாக திகழ்ந்தவர் ராஜ்குமார். அவரது மகன்களில் ஒருவர் சிவராஜ்குமார். சிறு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்த அவர்; 1986ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் படத்தில் ஹீரோவாக மாறினார். அப்போதிருந்து வெற்றியையும், தோல்வியையும் மாற்றி மாற்றி பார்த்துவருகிறார். அவருக்கென்று பெங்களூருவில் உயிரை கொடுக்கவும் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் பலரிடம் அன்பை சேர்த்து வைத்திருக்கிறார்.
ஈகோ பார்க்காத சிவராஜ்குமார்: சின்ன வெற்றியை பார்த்துவிட்டாலே தலைக்கனத்தில் ஆடும் பலருக்கு மத்தியில் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஏகப்பட்ட வெற்றிகளை பார்த்திருந்தாலும், பணத்தை எக்கச்சக்கமாக சம்பாதித்திருந்தாலும் அனைவரிடமும் ஈகோ பார்க்காமல் பழகக்கூடியவர் சிவராஜ்குமார். அதனால்தான் அவரை எல்லோரும் சிவாண்ணா என்று உரிமையோடு அழைப்பார்கள். கன்னடத்தில் வேறு எந்த நடிகரையும் இப்படி உறவுமுறை சொல்லி ரசிகர்கள் அழைப்பதில்லை.

தமிழில் சிவராஜ்குமார்: தமிழ்நாடு மீதும், தமிழர்கள் மீதும் அதீத அன்பு வைத்திருப்பவர் சிவராஜ்குமார். சரளமாக தமிழ் பேசும் அவர்; ஜெயிலர் படத்தில்தான் கோலிவுட்டில் இன்ட்ரோ கொடுத்தார். படத்தில் சில சீன்களே வந்தாலும் அவர் ஸ்க்ரீனில் வரும்போதெல்லாம் தியேட்டர்களில் விசில்கள் பறந்தன. ஜெயிலருக்கு பிறகு தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அதிலும் அவரது ரோல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் அறுவை சிகிச்சை: தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக ஜனநாயகன் படத்தில் அவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால்; உடனடியாக அமெரிக்காவின் மியாமியில் இருக்கும் மருத்துவமனையில் வைத்து கடந்த வருடம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
எமோஷனலான சிவராஜ்குமார்: அந்தவகையில் அவர் நடித்திருக்கும் 45 திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அவர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆபரேஷனுக்காக சென்றேன். போகும்போது கண்கள் முழுக்க கண்ணீர்தான். ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டேன். வீடு, பத்திரிகையாளர்கள் என அனைத்தையும் பார்த்தேன்.
மனைவியிடம் சொன்ன வார்த்தை: மீண்டும் வருவோமா மாட்டோமா என்பது தெரியாது. மருத்துவர்கள் கியாரண்டி கொடுத்திருந்தாலும், சப்போஸ் ஏதோ ஒன்று ஆனால். மனிதன் சப்போஸ் என்ற வார்த்தையை பயன்படுத்திதான் ஆக வேண்டும். எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது. அமெரிக்காவுக்கு போகும்போது எல்லோருமே அமைதியாக இருந்தோம். ஆபரேஷன் அன்று காலை எனக்கு எதோ கொடுத்தார்கள். நான் மயக்க நிலைக்கு சென்றேன். 5 அல்லது 6 மணி நேரம் கழித்து விழித்து பார்த்தபோது எனது மனைவி இருந்தார். அவரது கையை பிடித்தபோது, 'மீண்டும் நான் உன் கையை பிடிப்பேன் என நினைக்கவில்லை' என்றுதான் சொன்னேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு உலகமே எனக்கு ஒரு மாதிரி தெரிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











