விஜய் வெற்றி.. கொண்டாடுவதற்கு பிளான் போட்ட சிம்பு.. வேற லெவல் விசில் ஆதரவாளரா இருக்காரே
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். அவர் முதலமைச்சரான பிறகு திரைத்துறையிலிருந்து ஏராளமானோர் நேரில் சென்று சந்தித்துவருகிறார்கள். தங்கள் துறையிலிருந்து மீண்டும் ஒருவர் சி.எம் ஆகியிருப்பது பெரிய மகிழ்ச்சி கொடுப்பதாகவும் அவர்கள் பூரித்து போய் சொல்கிறார்கள். இந்நிலையில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சரானதை கொண்டாடும் விதமாக சிம்பு ஒரு செயலை செய்திருக்கிறாராம்.
திமுகதான் 2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் என எல்லோருமே கணித்தார்கள். விஜய்யை பொறுத்தவரை பத்து சீட்டுகளைகூட அவரால் தாண்ட முடியாது என்பதுதான் கணிப்பு. ஆனால் அனைத்தையும் அடித்து நொறுக்கும் விதமாக மொத்தம் 108 தொகுதிகளில் வென்றுவிட்டது தவெக. மற்ற கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகவும் மாறிவிட்டார். அதுமட்டுமின்றி நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது.

என்ன ஆனது?: இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்பதை இதற்கு முந்தைய அரசியல்வாதிகள் சாத்தியமில்லாத அல்லது ஒத்துவராத ஒன்றுதான் சொன்னார்கள். ஆனால் தவெக அமைச்சரவையில் விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தம் ஏழு தலித்துகளும், நான்கு பெண்களும் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். இத்தனை வருட பழைய நடைமுறையை விஜய் உடைத்துவிட்டார் என்று பாராட்டுக்கள் குவிகின்றன.
திரைத்துறையிலும் மகிழ்ச்சி: இதற்கிடையே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தங்கள் துறையிலிருந்து ஒருவர் மாநிலத்தை ஆள்கிறார் என்பதை நினைத்து திரைத்துறையினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு விஜய்யை சரமாரியாக விமர்சனம் செய்த கருணாஸ், நாசர் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு நேரில் சென்று விஜய்யை சந்தித்தார்கள். மேலும் வெங்கட் பிரபு, விக்ரமன், சிபி ராஜ் என பலரும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்கள்.
சிம்புவின் பிளான்: சூழல் இப்படி இருக்க விஜய்யின் வெற்றியை கொண்டாட சிம்பு செய்திருக்கும் பிளான் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய் முதலமைச்சராகியிருப்பதை கொண்டாடுவதற்காக் அரசன் பட ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறாராம். விஜய் அண்ணா வெற்றி பெற்றுவிட்டார் எனவே அதை செலிபிரேட் செய்ய வேண்டும் என வெற்றிமாறனிடம் நேராகவே சொல்லிவிட்டு பிரேக் எடுத்திருப்பதாகவும்; விரைவில் விஜய்யை நேரில் சந்திப்பார் என்றும் வலைப்பேச்சு டீம் தெரிவித்திருக்கிறது.
அரசன் நிலை என்ன?: முன்னதாக, சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் அரசன். இதில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். சமீபத்தில் வேல்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷூட்டிங் தடைபட்டிருந்தது. அது அனைத்தும் தீர்க்கப்பட்டு மீண்டும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த முறை சிம்பு, விஜய் சேதுபதி காம்பினேஷன் சீன்களை வெற்றிமாறன் எடுப்பார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
