நன்றினு ஒற்றை வார்த்தையில்.. என் உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது.. ரசிகர்களுக்கு சிம்பு நன்றி !
சென்னை : மாநாடு திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் சிம்பு நெகிழ்ந்து நன்றி கூறியுள்ளார்.
மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி திரையரங்கில் வெளியானது.
டைம் லூப் முறையில் வெளியாகி உள்ள இத்திரைப்படம், நடிகர் சிம்புவிற்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது.

மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சிம்பு அறிக்கை
இந்நிலையில், நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இறைவன் மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் 'மாநாடு'. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. மாநாடு படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.

அற்புதமான இயக்கம்
இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தைத் தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், மாநாடு படக்குழு, என் தாய், தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

அனைவருக்கும் நன்றி
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே.. ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக்கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்.

ரசிகர்கள் உற்சாகம்
வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துகளும். என சிம்பு அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.சிம்பு இவ்வாறு நன்றி கூறியுள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











