ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. நடந்தால் சூப்பரா இருக்குமே பாஸ்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக இருக்கும் எஸ்டிஆரின் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கோலிவுட்டில் இள வயதிலேயே அத்தனை திறமைகளையும் கொண்டிருந்த சிம்பு; சில காரணங்களால் கவனத்தை சிதறவிட்டு சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் நிலைமைக்கு ஆளானார். இனி அவர் அவ்வளவுதான் என்று பலரும் சொல்லிய சூழலில்; அந்த சீன்லாம் இங்கே இல்லை என்கிற ரீதியில் உடல் எடையை குறைத்து தரமான கம்பேக் கொடுத்தார். அப்படி அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின.
தக் லைஃப் சறுக்கல்: அந்த இரண்டு படங்கள் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு கமலுடன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்தார். முதன்முறையாக உலக நாயகனுடன் சேர்ந்து நடித்ததால் பெரிய அளவில் படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் அரத பழசான கதையை மணி சார் டெலிவர் செய்ய; படமும் ஓடவில்லை; சிம்பு ஏற்றிருந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த அறிவிப்பு வந்தது.

என்ன அறிவிப்பு?: அதாவது வெற்றிமாறனுடன் சிம்பு எப்போது சேர்வார் என அவருடைய ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தார்கள். வடசென்னையில் அது நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும் நடக்கவில்லை. இப்போது அரசன் படத்தில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். கலைப்புலி தாணு படத்தை பிரமாண்டமாக தயாரித்துவருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பு: இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி கோவில்பட்டியில் மும்முரமாக நடந்துவருகிறது. ஸ்பாட்டில் சிம்புவின் நடிப்பை பார்த்து வெற்றி மெர்சல் ஆகிவிட்டதாகவும்; இத்தனை நாட்கள் இவரோடு பணியாற்றாமல் போய்விட்டோமே என்று நினைப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது. நிச்சயம் இந்தக் கூட்டணியில் உருவாகும் அரசன் தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்பது பலரது நம்பிக்கை.
புதிய படம் பற்றிய தகவல்: இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவரது 52ஆவது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்றும்; சமீபத்தில் நேரில் சந்தித்து முருகதாஸ் சொன்ன கதை எஸ்டிஆருக்கு பிடித்துப்ப்போக; நடிப்பதற்கு ஒத்துக்கொண்டுவிட்டார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











