சூப்பர் லவ் ஸ்டோரி ரெடி.. மீண்டும் கை கோர்க்கும் சிம்பு - கௌதம் வெற்றிக் கூட்டணி!
மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.
Recommended Video

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிம்பு நடிக்க இருக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்று இப்படமும் காதல் கதைக்களம் தானாம்.
மின்னலே படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர்.
தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்', தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார்.

வெற்றிப் படங்கள்:
இந்நிலையில் தனது அடுத்த படத்தில் சிம்புவை மீண்டும் அவர் இயக்க இருக்கிறார். ஏற்கனவே சிம்பு - கௌதம் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரண்டு வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் விண்ணைத் தாண்டி வருவாயா சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தது.

பாடல்கள் ஹிட்:
ஆனால், அச்சம் என்பது மடமையடா பட வேலைகளின் போது சிம்புவுக்கும், கௌதமிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஊடகங்களில் பேசினர். படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆனால் படப்பாடல்கள் ஹிட்டானது.

காதல் கதை:
இந்நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்கின்றனர். இதுவும் காதல் கதை தான் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இப்படமும் நிச்சயம் விண்ணைத் தாண்டி வருவாயா படம் போல் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்கிறார் கார்த்திக்?
ஏற்கனவே, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகன் கார்த்திக், 8 வருடங்கள் கழித்து என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கோணத்தில் புதிய படத்தை கௌதம் இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

விரைவில் அறிவிப்பு:
இப்படத்தில் தன் முதல் பட நாயகனான மாதவனை கௌதம் நடிக்க வைக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதில் சிம்புவே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











