விஜய்க்கு ஆதரவா இல்லைனு யார் சொன்னது.. களத்தில் சிம்பு.. திரளும் திரையுலகம்.. வரிசையா வராங்களே
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் நாளை ரிலீஸாகவிருந்த படம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு அரசியல் பின்னணிதான் காரணம் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். திரைத்துறையிலிருந்தும் நடிகர்களும், இயக்குநர்களும் குரல் கொடுக்கும் சூழலில்; நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். இதுதான் அவரது கடைசி படம் என்று வேறு சொல்லப்பட்டிருந்ததால் மிகப்பெரிய ஆர்வத்தை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த டிசம்பர் மாதமே படத்தை பார்த்துவிட்ட சென்சார் குழுவினர் சில மாற்றங்களை சொல்லியிருக்கிறார்கள். அதையும் செய்து படம் அனுப்பப்பட்டாலும்; அதற்கும் அதிகாரிகள் சான்றிதழ் தராமல் இழுத்தடித்தார்கள்.
கேவிஎன் தொடுத்த வழக்கு: இதனால் கடுப்பான கேவிஎன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு வழக்கை தொடர்ந்தது. அந்நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், "ஜனநாயகன் படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனினும் இன்னும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக கடந்த மாதமே அனுப்பினோம். டிசம்பர் 19ஆம் தேதி படத்தை பார்த்த அவர்கள் சொன்ன மாற்றத்தை செய்து மறு தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

நீதிமன்றம் ஒத்திவைப்பு: அந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம்; முதலில் வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்தது. மேலும் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸை ஏன் தள்ளி வைக்கக்கூடாது. தை பிறந்தால் வழி பிறக்கும்தானே என்று தெரிவித்திருந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒன்பதாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறி நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறது. எனவே ஒன்பதாம் தேதிக்குள் சென்சார் வாங்குவது இயலாத காரியமாகிவிட்டது.
பெருகும் ஆதரவு: எனவே ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகாது என்றும்; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சென்சார் சான்றிதழ் வழங்காததால் ஜனநாயகன் தள்ளிப்போனது திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகன், அஜய் ஞானமுத்து, கார்த்திக் சுப்புராஜ், சிபி சத்யராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் விஜய்க்கும், ஜனநாயகனுக்கும் ஆதரவாக தங்களது கருத்தினை தெரிவித்திருக்கிறார்கள்.
சிம்புவின் கருத்து: இந்நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில், " அன்புள்ள விஜய் அண்ணா. தடைகள் எப்போதுமே உங்களை தடுத்து நிறுத்தியதில்லை. இதை விட பெரிய புயல்களைகூட நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்கும்" என குறிப்பிட்டிருக்கிறார். இப்பிரச்னை ஆரம்பித்தபோது எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. இப்போது ஒவ்வொருவராக தங்களது ஆதரவு நிலைப்பாட்டை விஜய்க்கு கொடுப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











