சூர்யா நடிக்கவிருந்த படத்தில் சிம்பு நடிக்கிறாரா?.. நடந்தா நல்லாத்தான் இருக்கும்
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தனது 48ஆவது படம், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் நடிப்பு, இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசையமைப்பது என பல ஜானர்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் சிம்பு ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு மட்டும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக சில பிரச்னைகளையும் அவர் சந்தித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கவும் செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு உடல் எடை கூடியது; அவரது எண்ணமும் ஆன்மீகம் பக்கம் ஒதுங்கியது. முக்கியமாக இரண்டு காதல் தோல்விகளையும் சந்தித்தார். அதனால்தான் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அதன்படி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை.
அடுத்தடுத்த ஹிட்: அதற்கு பிறகு நடித்த மாநாடு சூப்பர் ஹிட்டடித்தது. மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப்: இதற்கிடையே தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார் அவர். தக் லைஃப் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. எஸ்டிஆர் 48 ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் எஸ்டிஆர் ரசிகர்கள். இந்தச் சூழலில் சூர்யா நடிக்கவிருந்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
புறநானூறு: அதாவது சூர்யாவை வைத்து சுதா கொங்கரா புறநானூறு என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானும் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லை. எனவே இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் சிம்புவின் 50ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக சமீபமாக ஒரு பேச்சு கோலிவுட்டில் அடிபடுகிறது. அநேகமாக அந்த 50ஆவது படம் சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், சிம்புவுக்கு 50ஆவது படமாக சுதாவின் படம் அமைந்தால் செமயாக இருக்குமே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











