நமக்காக போராடுறாங்க.. அவங்களை காயப்படுத்தலாமா.. மனித கடவுள்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!
சென்னை: கொரோனா எனும் கொடிய வைரஸிடம் உலகமே சிக்கியிருக்கும் நிலையில், நமக்காக போராடும் மருத்துவர்களை காயப்படுத்தக் கூடாது என நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ போட்டு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக் கிழமை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர் சைமனின் (55 வயது) உடலை அடக்கம் பண்ணக் கூடாது என மறியலில் மக்கள் சிலர் ஈடுபட்ட செயல், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பயத்தின் காரணமாக மக்கள் அவ்வாறு செய்திருந்தாலும், அது மனிதாபிமானம் அற்ற செயல் என பலரும் கண்டித்திருந்தனர்.

மருத்துவர் உடல் அடக்கம்
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மருத்துவருக்கு, மக்கள் செய்யும் நன்றிக் கடனா இது என்ற கேள்வியும் எழுந்திருந்தது. கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களை புதைத்தாலோ, எரித்தாலோ அந்த பகுதி மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது.

#WeLoveDoctors
ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அராஜகம் செய்தவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்கும் பதிந்துள்ளனர். இந்நிலையில், #WeLoveDoctors என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகர் சிவகார்த்திகேயன், மக்களை காப்பாற்றும் மனித கடவுள்களாகிய மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

மருத்துவர்கள் வருத்தம்
மேலும், சமீபத்தில் நடந்த சம்பவம், மருத்துவர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும் பயத்தையும் உண்டு செய்திருப்பதாகவும், நமக்காக அவர்கள் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவது ஒட்டுமொத்த மக்களின் கடமை ஆகும் எனக் கூறியுள்ளார்.

அரசு சொல்வதை கேளுங்க
மேலும், அரசு சொல்வதை கேட்டு, இன்னும் கொஞ்ச காலம் வீட்டிலேயே தனித்திருந்தோமேயானால், அனைவரும் விடுதலையாக வெளியே விரைவில் சுற்றும் நிலை உருவாகும் என்றும் கூறியுள்ளார். அரசு, அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை என பலருக்கும் இந்த வீடியோ மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











