Atlee - அட்லீயை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.. நண்பருக்காக களத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்
சென்னை: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீயும், சின்னத்திரையில் தோன்றி பிறகு நடிகராக வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்கள். அதாவது அட்லீ குறும்படம் எடுக்கும்போதிலிருந்து ரெண்டு பேரும் க்ளோஸ். இந்த சூழலில் அட்லீ குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இரண்டு பேருக்குமான நட்பையும் உணர்த்துகிறது.
முகப்புத்தகம் என்ற குறும்படம் எடுத்து ஃபேமஸ் ஆனவர் அட்லீ. அதன் பிறகு ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார். எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படம் மௌன ராகம் மாதிரி இருக்கிறது என்ற விமர்சனத்தை சந்தித்தாலும் அட்லீயின் மேக்கிங் பயங்கர ரிச்சாக இருக்கிறது என்ற பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதனாலேயே முதல் படத்தின் மூலம் பெரும் கவனத்தை பெற்றார் அட்லீ.

விஜய்யுடன் பயணம்: முதல் படம் வெற்றி பெற்றதை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் மெர்சல் நன்றாக ஓடியது பிகில் வாரிவிட்டது. விஜய்யை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கினாலும் அட்லீ ஒரு காப்பி இயக்குநர் என்றே பலரும் ட்ரோல் செய்தனர். ஆனால் அட்லீ அதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
ஷாருக்கான் ஜவான்: விஜய்யை வைத்து வரிசையாக மூன்று படங்களை இயக்கிய அட்லீ அடுத்தும் அவருடன் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்தனர். தமிழிலிருந்து அனைத்து டெக்னீஷியன்களையும் அழைத்து சென்று ஜவான் படத்தில் பணியாற்ற வைத்தார். இதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மெகா ஹிட்: எதிர்பார்த்தபடியே படத்துக்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் படத்துக்கு மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்தை மெகா ஹிட்டாக்கினார்கள். கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாகவும் அதனால் ஹேப்பியான ஷாருக்கான் மீண்டும் அட்லீயுடன் இணையும் மூடில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் பேட்டி: இந்நிலையில் அட்லீ குறித்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "பாலிவுட்டுக்கு சென்று 1200 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் ஒரு பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்தும் அட்லீயை நாம் கொண்டாடவில்லை. பாலிவுட்டில் அறிமுக படமே ஷாருக்கானை வைத்து இயக்கியது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வெற்றியை படைத்ததற்கு அவரை நாம் கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.
இங்க வர முடியாது: ஜவான் படத்தின் ட்ரெய்லரை பார்த்ததுமே அட்லீக்கு நான் ஒரு மெசேஜ் செய்தேன். அதில், படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும். நீ இந்தப் பக்கமே இனி வரமுடியாது. உன்னை அங்கே தூக்கி வெச்சு கொண்டாடிடுவாங்க என சொல்லியிருந்தேன். அது உண்மையிலே நடந்துவிட்டது. இதனை வேறு யாராவது சாதித்திருந்தால் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். பரவாயில்லை இனிமேலும் அட்லீயை ஒன்றும் செய்ய முடியாது. அவரும் விஜய்யும் இணைந்தால் அந்த பிசினஸ் வேறு லெவலில் இருக்கும். ஆனால் அது இப்போ மிஸ் ஆகுமே என்ற ஆதங்கம்தான் இருக்கிறது" என்றார். சிவகார்த்திகேயனும், அட்லீயும் ஸ்டார்கள் ஆகும் முன்னரிலிருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











