Ayalaan - நம்பி வாங்க.. ரஜினி முருகன் மாதிரி இருக்கும்.. அயலான் பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்
சென்னை: இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரவிக்குமார். டைம் ட்ராவல் ஜானரில் கலக்கியிருந்த அவர் தற்போது ஏலியன் ஜானரை கையில் எடுத்திருக்கிறார். அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கியிருக்கும் அயலான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் வந்தார்.
சிவகார்த்திகேயன கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல் ஹாசன் படத்தை தயாரிக்கிறார்.

அயலான்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
பொங்கலுக்கு ரிலீஸ்: படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தவுடன் சிவாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி படமானது பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று உலகம் முழுவதும் அயலான் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
பாசிட்டிவ்: அயலானுக்கு போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. தனுஷ்தான் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இன்று இரண்டு பேரின் படங்களும் ரிலீஸாகியிருக்கின்றன. எனவே இந்த ரேஸில் தனுஷ் வெல்வாரா இல்லை சிவகார்த்திகேயன் வெல்வாரா என்ற மில்லியன் டாலர் கேள்விதான் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அயலான் படத்தை பொறுத்தவரை இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. நம்பி சென்றதற்கு ஒரு ஜாலியான படம் பார்த்து வந்ததாக இதுவரை படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அயலான் படத்தை பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வந்தார்.
அப்போது பேசிய அவர், "இதற்கு முன்பு பொங்கல் ரிலீஸாக எனது படம் ரஜினி முருகன் வெளியானது. இப்போது அயலான் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக அந்தப் படம் போல் இதுவும் மக்களை சந்தோஷப்படுத்தும் என்று நம்புகிறேன். இதுவரை ஏலியன் ஜானரில் தமிழ் சினிமாவில் படங்கள் வந்ததில்லை. அதை முதன்முறையாக நாங்கள் ட்ரை செய்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
இது ஏலியன் ஜானர் மட்டுமில்லை ஃபேண்டஸியும் இருக்கிறது. கொடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் சிஜி பணிகளை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறோம். கண்டிப்பாக இந்தப் படம் திருப்திப்படுத்தும். பண்டிகை காலங்ககளில் குடும்பத்தோடு வெளியே போக வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். அவர்கள் இந்தப் படத்துக்கு வரலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 'நம்பி வாங்க சந்தோஷமா போங்க.. ரிப்பீட்ல வாங்க' என்றார்.


Click it and Unblock the Notifications











