சிவகார்த்திகேயனின் பராசக்தி.. எங்கே ஷூட்டிங் நடக்குது தெரியுமா?.. எஸ்கே மாஸா இருக்காரே
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த வருட தீபாவளிக்கு வெளியானது. தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்ததை மையமாக வைத்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கமல் ஹாசன் தயாரிப்பில் சிவாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை கொடுத்தார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டு 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

பராசக்தி: அமரன் படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்துக்கு முதலில் புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஹீரோவாக சூர்யா கமிட்டாகியிருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் புறநானூறிலிருந்து சூர்யா வெளியேறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமாக படத்தின் மையக் கரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இருக்கிறது என்று சொல்லப்பட்டது.
டைட்டில் டீசர்: சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் வந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இதில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். அதர்வா முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஸ்ரீலீலாவும் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதனை பார்க்கும்போது இந்தப் படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் பராசக்தியின் மூலக்கதை என்பது உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வருத்தப்பட்ட ரசிகர்கள்: டைட்டில் டீசரில் ஏகப்பட்ட விஷயங்கள் கூஸ் பம்ப்ஸை கொடுத்தன. அதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்களோ இந்தப் படத்தையா சூர்யா மிஸ் செய்துவிட்டார். கண்டிப்பாக அவர் நடித்திருக்க வேண்டும்; அப்படி நடித்திருந்தால் அவரது கரியரில் முக்கியமான படமாக அமைந்திருக்கும் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் டைட்டில் டீசரை பார்த்த சிவகார்த்திகேயனின் ரசிகர்களோ உச்சக்கட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.
சிதம்பரத்தில் ஷூட்டிங்: இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதன்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் படு ஸ்டைலாகவும், மாஸாகவும் இருக்கிறார். முன்னதாக, இந்தப் படத்தின் டைட்டிலுக்கு சில பஞ்சாயத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிவாஜி நடித்த பராசக்தி படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் இந்தப் பெயரை வேறு எந்தப் படத்துக்கும் பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே நேஷனல் பிக்சர்ஸுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்துமா இல்லை வேறு பெயரை வைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











