எம்ஜிஆர் ஆக வேண்டும்.. அஜித்தான் என்னை மதித்தார்.. எஸ்.ஜே. சூர்யா எமோஷனால் பேச்சு
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ராயன், வீர தீர சூரன் ஆகிய திரைப்படங்கள் தமிழிலும், தெலுங்கில் சரிபோதா சனிவாரம், கேம் சேஞ்சர் படங்களும் வெளியாகின. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் LIK திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக கொஞ்சம் பிசகினாலும் அந்தக் கதை தவறான கண்ணோட்டத்தோடு புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் மிக லாவகமாக அந்தப் படத்தை தரமாக உருவாக்கியிருந்தார். இதன் காரணமாக முதல் படத்திலேயே அவர் கவனிக்கக்கூடிய இயக்குநராக மாறிவிட்டார்.

சூர்யாவின் குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் விஜய்யின் கரியரிலும் குஷி திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் லுக்குகளில் குஷி படத்தின் லுக்குக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அப்போதே கலக்கிய எஸ்.ஜே. சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார். பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இசை படத்தை இயக்கினார்.

நடிகராக கலக்கிய சூர்யா: இதற்கிடையே கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் தமிழில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் தெலுங்கில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வெளியாகிறது. படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் பல விஷயங்களை பேசினார். கோபிநாத் எடுத்திருந்த அந்தப் பேட்டியில் பேசிய சூர்யா, "நான் இன்றுவரை சிங்கிளாக சுதந்திரமாக இருக்கிறேன். அந்த சுதந்திரத்தை கரெக்ட்டாக வைத்திருப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். நான் அடைய வேண்டிய உயரத்தை இன்னும் அடையவில்லை. அதனால் ஒரு ரிலேஷன்ஷிப்பில் கமிட்டாக வேண்டும் என்ற எண்ணம் வராமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் அடைய வேண்டிய இடம் என்பது மிகப்பெரிய இடம். அதை வெளியே சொன்னால் கண்டிப்பாக காமெடியாகத்தான் இருக்கும். ஆனாலும் விருப்பத்தை சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.
நான் அடுத்த எம்ஜிஆர் ஆக வேண்டும்: அந்த விருப்பம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். நடந்தாலும் சந்தோஷம் நடக்கவில்லையென்றாலும் சந்தோஷம். ஆனால் அந்த விஷயம் நடக்கும்வரை நான் முயற்சித்துக்கொண்டே இருப்பேன். அது என்ன ஆசை என்றால் இந்திய கலைத்துறையில் நான் எம்ஜிஆராக வேண்டும். அதுதான் என்னுடைய கணவு. அது நடக்கலாம் நடக்காமலும் போகலாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஒரு தமிழன் இந்தியா முழுக்க சென்று நிரூபித்து வெற்றியடைந்தான் என்று இருக்கட்டுமே. அதற்காக உழைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பேன்.

அஜித்தான் என்னை மதித்தார்: என்னுடைய வாழ்க்கை அஜித்திடமிருந்துதான்தொடங்கியது. அதுதான் உண்மை. அவர்தான் என்னை இயக்குநராக அங்கீகரித்தா என்பது இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும். ஓபனாக சொல்ல வேண்டுமென்றால் அஜித் இல்லாமல் இந்த எஸ்.ஜே. சூர்யா இல்லை. அதுதான் ரியாலிட்டி. இப்போதுதான் நான் எல்லோரும் மதிக்கக்கூடிய ஒரு நிலைமையில் இருக்கிறேன். ஆனால் நான் வாலி படம் இயக்கிய சமயத்தில் யாரும் மதிக்கக்கூடிய லுக்கில் நான் இருக்கமாட்டேன்.அப்படிப்பட்ட லுக்கில் இருந்த என்னை அஜித்தான் முதன்முறையாக என்னை கூப்பிட்டு எனக்குள் இருக்கும் திறமையை மதித்தார். முதல் படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். அதுதான் எனது இடத்துக்கான தொடக்கம். பிறகு தமிழில் குஷி, தெலுங்கில் குஷி, ஹிந்தியில் குஷி என்று வாழ்க்கை போனது.
அடுத்தக்கட்டத்துக்கு போகும் காலம் வந்துவிட்டது: ஒரு நடிகனாக நான் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் காலம் வந்துவிட்டது. ரொம்ப நாளைக்கு நான் வில்லன் ரோல் மட்டுமே ஏற்று சுற்றிக்கொண்டிருக்க முடியாது என்பது எனக்கு புரிகிறது. நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதற்காக வரவில்லை. கில்லர் என்னும் படத்தை இயக்கி நானே ஹீரோவாக நடிக்கப்போகிறேன். என்னுடைய இயக்கத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் ரசிகர்களுக்கு அந்தப் படம் கண்டிப்பாக பெரிய திருப்தியை கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை. நான் ஒரு விஷயத்தை தொட்டால் கண்டிப்பாக அது வித்தியாசமாக இருக்கும் என்ற அடையாளமும் இருக்கிறது. முதலில் ஒரு கதை என்னையே எக்ஸைட் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அந்தக் கதைக்குள் நான் போகமாட்டேன். கில்லர் கதை என்னை சந்தோஷப்படுத்தியது. ஆக்ஷன், காதல், காமெடி கலந்திருக்கும் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அது அமையும்.
குட் பேட் அக்லி இயக்குநர் பற்றி: ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநர். உண்மையில் அவர் ஒரு பயங்கரமான உழைப்பாளி. ரொம்பவே பாசிட்டிவ்வான மனிதர். எந்த சோகம் வந்தாலும் அந்த சோகத்திலும் அவர் தன்னுடைய உழைப்பில் பெஸ்ட்டைதான் கொடுப்பார். மார்க் ஆண்டனி பட ஷூட்டிங்கில் எல்லாம் அவ்வளவு பிரச்னைகள். அப்போது நான் அவரிடம், 'நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. உங்களுக்கு எப்போதும் நான் சப்போர்ட்டாக இருப்பேன்' என்று சொல்லி அவருடன் நான் முழுவதுமாக நின்றேன். நான் மட்டுமின்றி எல்லோருமே அவருக்கு ஆதரவாகத்தான் நின்றார்கள். அந்தப் படம் மெகா ஹிட்டானது. இப்போது குட் பேட் அக்லி இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் அஜித்தை மிக நன்றாக கொண்டு வந்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











