வாழ்க்கை கொடுத்த இயக்குநரையே நிராகரித்தாரா சூரி?.. கோலிவுட்டில் புது பஞ்சாயத்து ஸ்டார்ட்?
சென்னை: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சூரி சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்தார். அதேபோல் காதல், தீபாவளி, வின்னர் உள்ளிட்ட படங்களில் சில நிமிடங்களிலும், சில சீன்களில் மட்டும் தலை காட்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு படத்தில் அவருக்கு வெளிச்சம் கிடைத்தது. தற்போது அவர் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்து ஃபேமஸானவர் சூரி. அதற்கு முன்னதாக பல வருடங்கள் சினிமாவில் இருந்த அவருக்கு அந்தப் படம்தான் வாழ்க்கையையும், வெளிச்சத்தையும் கொடுத்தது. அந்த சீனில் அவரது நடிப்பை பார்த்த இயக்குநர்கள் சூரியை தங்களது படங்களில் காமெடி நடிகராக புக் செய்தார்கள். அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர் என்ற பெயரையும், இடத்தையும் பெற்றார்.

வரிசையாக படங்கள்: அப்படி அவர் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, ரவி மோகன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோலினை ஏற்றிருந்தார். அவரது காமெடி எவ்வளவுக்கு எவ்வளவு ரசிக்கப்பட்டனவோ அதே அளவுக்கு விமர்சனத்தையும் சந்தித்திருக்கின்றன. அதாவது அவரது காமெடியில் சிரிப்பே வரவில்லை; சந்தானமும் ஹீரோவாகிவிட்டதால் வேறு வழியில்லாமல் சூரியை காமெடி ஆக்டராக தங்களது படங்களில் இயக்குநர்கள் புக் செய்கிறார்கள் என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் ஓபனாக பேசினார்கள்.
கதையின் நாயகன்: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார் சூரி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்களோ; இந்த சூரிக்குள் இப்படிப்பட்ட ஒரு பக்குவமான நடிகர் இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டார்கள். அடுத்ததாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் அவர் நடித்த கருடன் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது.
அடுத்த படங்கள்: கதையின் நாயகனாக நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. அதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கொட்டுக்காளி படத்தில் சூரியின் நடிப்பு பெரிதாகவே கொண்டாடப்பட்டது. அதேசமயம் விடுதலை 2 படத்தில் சூரிக்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறைக்கபட்டே இருந்தது. இருந்தாலும் தனக்கு கிடைத்த ஸ்பேஸில் அட்டகாசமாகவே நடித்திருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மாமன் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன.
நிராகரித்தாரா சூரி?: இந்நிலையில் சூரி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கை கிடைக்க காரணமாக இருந்த வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் சமீபத்தில் சூரியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும்; ஆனால் தயாரிப்பாளர்கள் உங்களை இயக்குநராக போட ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்; அதனால் இப்போதைக்கு நாம் சேர்ந்து பணியாற்றுவது சாத்தியமாக இருக்காது என்று சூரி கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ, 'நினைத்தால் சூரியே தயாரிக்கலாம்; அப்படி இல்லையென்றால் அவரது உற்ற நண்பரான சிவகார்த்திகேயனின் பேனரில் சுசீந்திரனை இயக்குநராக போட்டு நடிக்கலாமே. ஏன் இப்படி செய்கிறார்' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை என்பதும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











