ஒருத்தரையும் விடமாட்டேன்.. கங்கணம் கட்டிக்கொண்ட சூரி.. அன்பையும் நன்றியையும் பொழியுறாரே!
சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாமன், கருடன், கொட்டுக்காளி ஆகிய மூன்று படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்திருக்கின்றன. இந்தச் சூழலில் மாமன் படத்தில் நடித்த அனைவரையும் சூரி தவறாமல் பாராட்டிவருவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அடையாளப்பட்ட சூரி தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்துக்கும் நகர்ந்தார். அஜித், விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் அவர் செய்த காமெடிகள் சமயங்களில் ரசிக்கப்படாமலும்; சமயங்களில் ரசிக்கப்பட்டும் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இந்தியான் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார்.
விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான விடுதலையில் சூரி கதையின் நாயகனாக அறிமுகமாகி; தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார். சண்டைக்காட்சிகளில் எடுத்திருந்த ரிஸ்க், உடல்மொழி என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கிய அவர் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார் என்று ரசிகர்கள் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடினர். எனவே இனி சூரி கதையின் நாயகனாகவே பயணப்படுவார் என்று ஆரூடமும் கூறப்பட்டது.
கருடன்: விடுதலைக்கு அடுத்ததாக சூரி நடிப்பில் கருடன் படம் வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சக்கைப்போடு போட்டது. முக்கியமாக சூரியின் நடிப்பு அசுர பாய்ச்சலில் இருப்பதாகவும்; இத்தனை வருடங்கள் பட்ட கஷ்டத்துக்கு சூரிக்கு இப்போதுதான் தீனி கிடைக்க ஆரம்பித்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி தள்ளினார்கள். அதேபோல் சூரியுடன் நடித்த இயக்குநரும், நடிகருமான சசிக்குமார், ''இனி சூரி கதையின் நாயகன் இல்லை; கதாநாயகன்.. அவருக்காக கதை எழுதுவார்கள்" என்று வாழ்த்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

இனி ஹீரோதான்: சூரியும் அதை ஏற்கும் விதமாக இனி கதாநாயகனாகவே நடிப்பேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அவர் கொட்டுக்காளி, விடுதலை 2, மாமன் என வரிசையாக வெளியாகின. அவற்றில் கொட்டுக்காளி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. விடுதலை 2வும், மாமன் திரைப்படமும் சுமாரான வரவேற்பை பெற்றன. இதற்கிடையே மாமன் படத்தின் கதையை சூரிதான் எழுதவும் செய்திருந்தார்.
பாராட்டும் சூரி: சூழல் இப்படி இருக்க மாமன் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டிவருகிறார் சூரி. அந்தவகையில் நடன இயக்குநர் பாபா பாஸ்கரை பாராட்டியிருக்கும் அவர், "ஒரு நடிகருக்கு உண்மையான வெற்றி என்பதாவது, அவன் நடிக்கிற கதாபாத்திரமாக மாறிவிடும் போது தான். அந்த மாதிரி மாயாஜாலத்தை பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியும், உயிரோட்டமாகவும் இருந்தது.
பாபா மாஸ்டர்தான் எங்கள் யூனிட்டுக்கு எப்போதும் positive energy கொடுத்தவர். அவருடைய கதாபாத்திரம், நடிப்பு, நடனங்கள்- படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. மாஸ்டர்... இந்தப் பயணத்தில் எங்களோடு சேர்ந்து இவ்வளவு அழகான அனுபவத்தை உருவாக்கியதற்காக எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களிடம் எங்களின் அன்பும், மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











