சூரி காட்டில் செம மழை.. அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் தெரியுமா?.. செம ஃபார்ம்ல இருக்காரு
சென்னை: நடிகர் சூரி இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அடுத்ததாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தச் சூழலில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருடன் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. தற்போது சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சூரி கோலிவுட்டின் முன்னணி காமெடியனாக திகழ்ந்தவர். தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை ஹீரோ ரோலில் வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். மேலும் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க்கையும் எடுத்திருந்தார் சூரி. அது அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. விடுதலை படத்தில் அவரது நடிப்பை பார்த்த பலரும் சூரி இனி ஹீரோவாக தொடரலாம் என்று நம்பிக்கை வார்த்தை அளித்தனர்.

கருடன்: பெரும்பாலானோரின் கருத்துப்படியே சூரி இப்போது ஹீரோவாகவே நடித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் சூரி. இந்தப் படங்கள் தவிர்த்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் கடந்த மே 31ஆம் தேதி ரிலீஸானது.
வசூல் வேட்டை: படத்துக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை கொடுத்திருக்கின்றனர். முக்கியமாக சூரியின் நடிப்பை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். இதுவரை படமானது 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூரி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். சூரியின் ஃபார்மை பார்த்த ரசிகர்கள் இனி சூரி கதையின் நாயகன் என்ற இடத்திலிருந்து கதாநாயகனாக மாறுவார் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
படையெடுப்பு: அவர்களின் ஆரூடம் பலிக்கும் விதமாக சூரியை கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஃபிக்ஸ் செய்ய ஏராளமான இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னிடம் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குவிவதால் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்துவருகிறாராம் சூரி. அந்தவகையில் சூரி அடுத்து ஒருவரது இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
யார் இயக்கத்தில்?: அதன்படி விலங்கு வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில்தான் நடிக்கவிருக்கிறாராம் சூரி. சமீபத்தில்தான் பிரசாந்த் கூறிய கதையை சூரி ஓகே செய்துவிட்டதாகவும்; இருவரும் இணையும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் விலங்கு. விமல், இனியா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த சீரிஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











