சூரியின் ஃபுல் ஃபார்முக்கு கொட்டுக்காளி முட்டுக்கட்டை போட்டதா?.. இவ்வளவுதான் வசூலா?
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கிய அவர் இப்போது கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவர் நடித்த விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதைக்களைங்களை கொண்டிருந்தன. இந்தச் சூழலில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கொட்டுக்காளி திரைப்படம் வசூலில் டல்லடித்திருக்கிறது.
சினிமாவில் கிடைத்த வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார். அதனையடுத்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறினார் சூரி.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். கடந்த வருடம் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. அடுத்ததாக நடித்த கருடன் படமும் மெகா ஹிட்டானது.
கொட்டுக்காளி: கதையின் நாயகனாக சூரி நடித்த விடுதலை, கருடன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் வரவேற்பை பெற்றன. இப்போது வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார் சூரி. படமானது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் விருதுகளை அள்ளியது. மேலும் திரையுலகினரும் படத்தை ரொம்பவே கொண்டாடினார்கள். கடந்த 23ஆம் தேதி வெளியான படத்துக்கு ரசிகர்களும் தங்களது ஏகோபித்த ஆதரவுகளை கொடுத்திருக்கிறார்கள்.
வசூலில் டல்: படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் வசூல் ரீதியாக டல்லடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது படம் பார்த்த பல பேர் இந்தப் படம் தங்களுக்கு புரியவே இல்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் இந்த மாதிரியான படங்களை கொண்டாடினால்தான் தமிழ் சினிமா வளரும் என்பது ஒருதரப்பினரின் கருத்து. இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி உலக அளவில் மொத்தம் 3 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விடுதலை, கருடன் என ஃபுல் ஃபார்மில் போய்க்கொண்டிருந்த சூரிக்கு கொட்டுக்காளி முட்டுக்கட்டை போட்டுவிட்டதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











