விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் இதுதான் பிரச்னையாம்.. சீக்ரெட் சொன்ன பத்திரிகையாளர்
சென்னை: போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவர் அடுத்ததாக இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின்போதுதான் நடிகை நயன்தாராவை காதலித்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க அவர் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் அஜித்துக்கும், விக்னேஷ் சிவனுக்குமான பிரச்னை குறித்து சுபைர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி, ஷோபனா, விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படம் நல்ல கதையம்சத்துடன் வந்தாலும் போட்டியாக களமிறங்கிய துப்பாக்கி படத்தினால் இருக்கும் இடம் தெரியாமல் போனது போடா போடி திரைப்படம். அந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே போஸ்டர் டிசைன், பாடல்கள் எழுதுவது என தன்னை சினிமாவில் வைத்துக்கொண்டார். அப்படி அவர் என்னை அறிந்தால் படத்திலும் ஒரு பாடலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் திருமணம்: அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
எல்.ஐ.சி டூ எல்ஐகே: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கிவருகிறார். முதலில் அந்தப் படத்துக்கு எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
விறுவிறு ஷூட்டிங்: இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஏனெனில் முதலில் அவர் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்து அதிலிருந்து வெளியேறியதை அடுத்து; விக்னேஷின் சினிமா வாழ்க்கை அழியும் அபாயத்தில் இருக்கிறது என்று பலரும் பேசினார்கள். எனவே இந்தப் படத்தை வெற்றிப் படமாக கொடுத்து தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
சுபைர் பேட்டி: இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கும், அஜித்துக்கும் நடந்த பிரச்னை குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “லண்டனில் வைத்துதான் அஜித்திடம் விக்னேஷ் சிவன் கதை சொன்னார். அப்போது கதையில் சில மாற்றங்களை அஜித் சொன்னார். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு அதில் உடன்பாடில்லை. அதனையடுத்து அஜித்துக்கே தெரியாமல் லைகா நிறுவனத்திடம் சென்று கதையை கூறினார். அது அஜித் காதுக்கு வந்தது. தனக்கு தெரியாமல் விக்னேஷ் சிவன் லைகாவுக்கு போய்விட்டாரே என்ற டென்ஷன் அஜித்துக்கு வந்துவிட்டது. அதனையடுத்துதான் படத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்” என்றார்.


Click it and Unblock the Notifications











