தலைவா கோயிலுக்கு வாங்க.. சட்டென காரை நிறுத்தி ரஜினிகாந்த் சாமி தரிசனம்.. எந்த கோயிலில் தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 74 வயதிலும் எனர்ஜி குறையாத எந்திரன் போல உழைத்துக் கொண்டு இருக்கிறார். அரசியல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்கிற உறுதியான நிலைப்பாடை எடுத்த பிறகு சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு அந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்து ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் பகத் ஃபாசில் வில்லனாக இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், ஜெயிலர் 2 ஷூட்டிங்கிற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது காரை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகம்: தனது அரசியலையே ஆன்மிக அரசியலாக பண்ணப் போவதாகத் தான் ரஜினிகாந்த் அறிவித்தார். அந்த அளவுக்கு அவருக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகம். இமய மலைக்கு அடிக்கடி சென்று அங்கே உள்ள பாபாஜி குகையில் தியானம் செய்து வருவார். மேலும், பல்வேறு சக்திவாய்ந்த திருத்தலங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரஜினிகாந்தின் 100வது படமாக ராகவேந்திரா படம் அமைந்தது. பாபா படத்திலும் ஆன்மிகத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டிருந்தார்.
ஜெட் வேகத்தில் ஜெயிலர் 2: ஜெயிலர் படத்துக்குப் பிறகு பொறுமையாக வெயிட் பண்ணி ஜெயிலர் 2 படத்தைத் தான் அடுத்து செய்வேன் என நெல்சன் உறுதியாக காத்திருந்த நிலையில், தற்போது ஜெட் வேகத்தில் ஜெயிலர் 2 படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பகத் ஃபாசில் மற்றும் பாலகிருஷ்ணா இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே பகத் ஃபாசில் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் உடன் உணர்ச்சி பொங்க நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோயிலில் சாமி தரிசனம்: இந்நிலையில், ஜெயிலர்2 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள
ஸ்ரீ மாதேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அந்த கோயிலின் குருக்கள் கோரிக்கையை ஏற்று தனது காரை நிறுத்தி வழிபாடு செய்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தலைவா ஒரு நிமிஷம் காரை நிறுத்துங்க என குருக்கள் கேட்டுக் கொண்டதும் ரஜினிகாந்த் அவருக்கு மரியாதை அளித்து அந்த கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கியுள்ளார். இந்தளவுக்கு எளிமையாக இருக்க ரஜினிகாந்த்தால் மட்டுமே முடியும் என அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
கூலி சாதனை படைக்கும்: தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு நடிகராலும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைக்க முடியவில்லை என்கிற நிலை உள்ளது. ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரும் கடைசியாக 600 கோடி வரை வசூல் ஈட்டி அசத்தினர். இந்நிலையில், கூலி படத்தின் மூலம் நிச்சயம் அந்த சாதனையை ரஜினிகாந்த் படைப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயிலர் 2 திரைப்படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











