எல்லோருக்கும் மாதவன் போல ஒரு நல்ல நண்பர் இருந்தால் போதும்.. மேடியை புகழ்ந்த சூர்யா.. ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் மாதவன் போல ஒரு நண்பர் அனைவருக்கும் இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா போட்ட ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆயுத எழுத்து படத்தில் மாதவனும் சூர்யாவும் இணைந்து நடித்து இருப்பார்கள்.
மாதவனின் ராக்கெட்டரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுத எழுத்து
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் மாதவனும் இணைந்து நடித்து இருந்தனர். ரவுடி கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் நடித்திருந்த மாதவன் சூர்யாவுடன் நேப்பியர் பாலத்தில் மோதிய சண்டைக் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக மிரட்டின.

நல்ல நண்பர்கள்
அந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே இருந்த நட்பு மிகவும் நெருங்கிய நட்பாக மாறி நீண்ட காலம் தொடர்ந்து வருகிறது. சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடனும் நடிகர் மாதவன் நிறைய படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

மாதவன் இயக்கத்தில்
மாதவன் இயக்கி நடித்து வரும் ராக்கெட்டரி படத்தில் கேமியோ ரோலில் நடிகர் சூர்யா நடித்துள்ள காட்சிகள் அந்த படத்தின் டிரைலரில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு மீண்டும் மாதவன் உடன் சூர்யா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

உலகத்துக்கு ஏதாவது செய்யத் தூண்டும்
இந்நிலையில், அமேசான் பிரைமில் ஜெய்பீம் படத்தை பார்த்த நடிகர் மாதவன் சூர்யாவை வெகுவாக பாராட்டி உள்ளார். சில படங்கள் மட்டுமே நம்மை அறியாமல் நாம் இருக்கும் கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வர வைத்து நம்மை சுற்றி இருக்கும் உலகத்துக்கு ஏதாவது செய்யத் தூண்டும். ஜெய்பீம் திரைப்படம் என்னை வெகுவாக தூண்டி உள்ளது எனக் கூறியுள்ளார்.

இப்படியொரு நண்பன் இருந்தால்
"எல்லோருக்கும் மாதவன் போல இப்படியொரு நண்பன் இருந்தால் போதும், உங்கள் உலகம் சிறப்பாக இருக்கும். லவ் யூ பிரதர்" என மாதவனின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. ராக்கெட்டரி மட்டுமில்லை இருவரும் இணைந்து ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் அது உங்கள் இருவராலும் முடியும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











