அட இது சூப்பரா இருக்கே.. சச்சின், ரெய்னாவுடன் கிரிக்கெட் விளையாடிய சூர்யா
மும்பை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் மும்பையில் நடைபெற்ற ISPL கிரிக்கெட் லீக்கில் சச்சின், ரெய்னா உள்ளிட்டோருடன் சூர்யா கிரிக்கெட் விளையாடினார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பல மொழிகளில்: சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படம்தான் ஹை பட்ஜெட் படம். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவரும் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னை, கோவா, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில்தான் சூர்யா படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுத்து முடித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்; இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
என்ன கதை: இந்தப் படமானது பீரியட் ஜானரில் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானரில் கங்குவா வராது என்றும்; கதையின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் காலகட்டத்தில் நடப்பது மாதிரிதான் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட சில நிமிடங்கள்தான் பீரியட் ஜானரில் படம் நகரும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிகிறது.
அடுத்த படம்: இதற்கிடையே தமிழில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா இப்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும். அந்த ஹிந்தி படத்துக்காகத்தான் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுதான் காரணமா?: அதுமட்டுமின்றி மும்பையில் சூர்யா இருக்கும் வீடியோக்கள் ட்ரெண்டாகின. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், முனாஃப் பட்டேல் உள்ளிட்டோருடன் ISPL கிரிக்கெட் லீக்கில் விளையாடினார். மார்ச் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் இந்த லீக்கில் சென்னை சிங்கம்ஸ் அணியை சூர்யா வாங்கியிருக்கிறார். முதலில் சச்சின், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்களின் பந்துவீச்சை எளிதாக சமாளித்த சூர்யா; முனாஃப் பட்டேல் வீசிய ஓவரில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். இது ஒருபுறம் இருக்க ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்திருப்பதால் அங்கு தான் நிலைக்க வேண்டும் பாலிவுட்டோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில்தான் இந்த போட்டியில் அவர் கலந்துகொண்டதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











