ஜோதிகா சொல்லிட்டே இருப்பாங்க.. அந்த பிரச்னை உங்களுக்கு வேண்டாம்..மெய்யழகன் விழாவில் சூர்யா ஓபன் டாக்
சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யாரே, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.
ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
மெய்யழகன்: இப்போது அவர் 96 இயக்குநர் பிரேம் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் அரவிந்த் சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் பாடல்கள் எல்லாம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறது மெய்யழகன் திரைப்படம்.
சூர்யா பேச்சு: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சூர்யா, "மெய்யழகன் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு சந்தோஷம், அழுகை என எல்லாமே சேர்ந்து வந்தது. பருத்திவீரன் படத்துக்கு பிறகு இந்தப் படத்தை பார்த்துவிட்டு கார்த்தியை கட்டியணைத்துக்கொண்டேன். அதேபோல் ரோஜா பட ரிலீஸின்போது அரவிந்த் சாமியை தேவி தியேட்டரில் பார்த்தேன். அப்போது அவர் போட்டிருந்த டிஷர்ட்டை போலவே நானும் வாங்கி போட்டுக்கொண்டேன்.
ஜோதிகா சொல்லிட்டே இருப்பாங்க: 96 படத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அந்தப் படம்போல் இந்தப் படமும் ஒரே இரவில் நடக்கும் கதைதான். கார்த்தியின் கதை தேர்வு குறித்து ஜோதிகா என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல் ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள். அது எவ்வளவு கலெக்ஷன் செய்தது என்ற பிரச்னையெல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு வேண்டாம்.முக்கியமாக படத்தை பார்ப்போம். விமர்சனம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரியான படங்கள் அபூர்வம்" என்றார்.


Click it and Unblock the Notifications











