கெட்டவனைத்தான் மக்களுக்கு பிடித்திருந்தது.. ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி சூர்யா ஓபன் டாக்
சென்னை: சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சூர்யா அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருப்பது கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும்; எவ்வளவு வசூலித்தாலும் அதற்கான ஆதாரத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்கிறேன் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா பேட்டி: இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சூர்யா அளித்த பேட்டியில், " விக்ரம் படத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் இருந்தார்கள். நான் படத்தின் கடைசி இரண்டு நிமிடங்களில்தான் வருவேன். அதற்கான ஷூட்டிங் அரைநாள் மட்டுமே நடந்தது. அந்த கேரக்டருக்காக நான் எந்த பிளானும் செய்யவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன்; லைட் செய்தார்கள். கேமரா செட் செய்தார்கள். நான் பேச வேண்டிய வசனங்களை கையில் கொடுத்தார்கள்.
முழுக்க முழுக்க கெட்டவன்: என்னுடைய படங்களில் கடந்த 20 வருடங்களாக புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. நான் அதை செய்யவேக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் ரோலக்ஸ் கேரக்டரை பொறுத்தவரை அவன் முழுக்க கெட்டவன்.எனவே நான் ஏன் நிஜ சூர்யாவை அதில் திணிக்க வேண்டுமென்று நினைத்தேன். மேலும் எனக்கான விதிமுறைகளை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். காட்சிக்கு முன்பு எனக்கு சிகரெட் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு பிறகுதான் ஷூட்டிங் தொடங்கியது.
கெட்டவனைத்தான் பிடிக்கும்: ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. ரோலக்ஸ் உலகம் முழுக்க முழுக்க கெட்டவைகளாலும், கெட்டவர்களாலும் நிறைந்தது. அந்த கெட்டவனைத்தான் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. பொதுவாகவே நான் என்னுடைய பழைய நினைவுகளை சார்ந்து இருக்கக்கூடியவன். அதில் முழுவதும் மூழ்கிடுவேன். அது எனக்கு ரொம்பவே நெருக்கமான ஒன்று. எப்போது அதை வெளியில் காண்பித்தது கிடையாது. என்னுடைய எமோஷனைத்தான் நான் நடிப்பாக வெளிப்படுத்துகிறேன்.
கமலை நினைத்து பயம்: அந்த சீன் எடுக்கும்போது கமல் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அவர் அங்கு மூன்று மணிபோல் வருவதாக சொல்லியிருந்தார். எனவே அவர் வருவதற்கு முன்னதாகவே எனது ஷூட்டிங்கை முடித்துவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தேன். ஏனெனில் அவர் முன்னால் என்னால் நடிக்கவே முடியாது. கூடவே எனக்கு விமானத்தை பிடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. இவ்வளவு இருந்தும் அந்த சீனுக்கான மூடினை லோகேஷ்தான் முழுக்க முழுக்க செட் செய்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











