‘சாதித்த விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சம், விவசாயிகள் நலத்திட்டத்திற்காக ரூ. 1 கோடி’.. சபாஷ் சூர்யா!
சென்னை : கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும், தமிழக விவசாயிகளின் நலத்திட்டங்களுக்காக ரூ.1 கோடியும் வழங்கப்பட்டது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 13ம் தேதி ரிலீசான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயம், ஆணவக் கொலை மற்றும் குடும்ப உறவுகள் பற்றி பேசியுள்ள இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அரங்கம் நிறைந்த காட்சிகளாக இப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

பட வெற்றி விழா:
இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

5 விவசாயிகள்:
இந்த நிகழ்ச்சியில் விவசாயத்தில் சாதனை படைத்த நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அதாவது மொத்தம் 5 விவசாயிகளுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

விவசாயிகள் மேம்பாட்டிற்காக:
இதேபோல், தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். விரைவில் இதற்கான பணிகள் அகரம் பவுண்டேசன் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

விவசாயிகளுக்கும்:
ஏற்கனவே அகரம் பவுண்டேசன் மூலம் ஆண்டுதோறும் வறுமையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சூர்யா கல்வி உதவி செய்து வருகிறார். தற்போது இதில் விவசாயிகள் மேம்பாட்டு பணிகளும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











