நீங்களா நானானு பார்த்துடலாம்.. மிரட்டுறீங்களா சி.எம்.சார்.. முதலமைச்சரை வெளுத்து வாங்கிய விஜய்
நாகை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை சகட்டுமேனிக்கு விளாசிவருகிறார். தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர் இன்று நாகப்பட்டினத்தில் வைத்து தொண்டர்களையும், மக்களையும் சந்தித்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் ஓபனாக சவால் விட்டார்.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி பிறகு மக்கள் இயக்கமாக மாற்றினார். அப்போதிருந்து தனது இயக்கத்தின் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்தார். இதன் காரணமாக அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைக்க ஆரம்பித்தார்கள். அந்த வேண்டுகோளுக்கு ஏற்ப சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய்.
திமுகதான் எதிரி: தவெகவை தொடங்கியதிலிருந்து திமுகவை பலமாக டார்கெட் செய்து அட்டாக் செய்துவருகிறார் விஜய். முதல் மாநாடு, அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா என தான் மேடை ஏறும் அத்தனை நிகழ்வுகளிலும் திமுகவையும் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். மதுரையில் நடந்த மாநாட்டில்கூட ஸ்டாலினை அவர் அங்கிள் என்று அழைத்தது பெரும் விவாத பொருளாக மாறியது. விஜய்யின் இந்த தாக்குதலுக்கு திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துதான் வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்: முக்கியமாக விஜய் வெளியே வந்து மக்களை சந்திக்கவே மறுக்கிறார், வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என கடுமையாக ட்ரோல் செய்தனர் திமுகவினர். நிலைமை இப்படி இருக்க ’உங்கள் விஜய் நா வரேன்’ என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் அவர். அந்த வகையில் திருச்சியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த அவர் கடந்த வாரம் சனிக்கிழமை தொண்டர்களிடம் பேசினார்.
சனிக்கிழமை நாயகன்: விஜய்யின் இந்த அரசியல் சுற்றுப்பயணத்தையும் திமுகவினர் கிண்டல் செய்துவருகிறார்கள். அதாவது அவர் வாரா வாரம் சனிக்கிழமை மட்டுமே தொண்டர்களை சந்திக்கும்படி அவரது பயண திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்த திமுகவினரோ, சனிக்கிழமை நாயகன் என்றும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று அவர் நாகையில் வைத்து தொண்டர்களை சந்தித்தார்.
முதலமைச்சர் மீது தாக்குதல்: வழக்கம் போல் இன்றும் திமுகவையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய். பேருந்தில் நின்றபடி பேசிய அவர், "நான் பேசும்போது ஸ்பீக்கருக்கு போகும் ஒயரை கட் செய்கிறார்கள். முதலமைச்சரிடம் நான் நேரடியாகவே கேட்கிறேன். மோடியோ, அமித் ஷாவோ இங்கு வந்து பேசும்போது இப்படி எதையாவது உங்களால் கட் செய்ய முடியுமா?.. பேஸ்மெண்ட் அதிரும். என்ன சி.எம்.சார் மிரட்டி பார்க்குறீங்களா?
நீங்களா நானானு பார்ப்போம்: மறுபடியும் சொல்றேன். 2026ல் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டாமல் தில்லாக, கெத்தாக, நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள் சார். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா இல்லை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒருவனாக இருக்கும் இந்த விஜய்யா என்று பார்த்துடலாம் சார்" என்றார்.


Click it and Unblock the Notifications











