ரஜினி யாருக்கு வாக்களித்தார்?.. சுற்றி நின்று வேடிக்கை.. எலெக்ஷன் பூத்தில் என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 84.69 சதவீத வாக்குகளுடன் நிறைவடைந்திருக்கிறது. சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை ஆர்வத்தோடு வாக்களித்தார். விஜய்யின் அரசியல் வருகை, SIR விவகாரம் உள்ளிட்டவை எல்லாம் வாக்குகள் சதவீதத்தை அதிகரித்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். சூழல் இப்படி இருக்க நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னையில் பதிவு செய்தார். அப்போது அவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த விஷயம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டிகளை இம்முறை சந்தித்தது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல். தான் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே திமுகவுக்கும், தவெகவுக்கும் நடக்கும் போட்டிதான் இந்த தேர்தல் என்று விஜய் சொல்லிக்கொண்டே இருந்தார். மாறாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முதற்கட்ட தலைவர்கள் எல்லாம் விஜய்யின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. விஜய் ஒரு நல்ல நடிகர் என்பதில்தான் ஸ்டாலினின் நிலைப்பாடு இன்னமும் இருக்கிறது.

நேற்று நடந்த தேர்தல்: இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை வாக்களித்தே தீர வேண்டும் என முனைப்போடு தமிழ்நாடு முழுவதும் இருந்த மக்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து; குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தார்கள். சென்னை, கோவை பேருந்து நிலையங்கள் எல்லாம் பண்டிகை காலம் போல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பேருந்து வசதிகளும் முறையாக இல்லை. தனியார் பேருந்துகள் கூட்டத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டன.
ரஜினி வாக்களித்தார்: சாமானியர்களிலிருந்து செலிபிரிட்டிகள்வரை வாக்குகளை செலுத்தினார்கள். அந்தவகையில் ரஜினிகாந்த் நேற்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் வாக்களித்தபோது அவரை சுற்றி சிலர் நின்றுகொண்டு அவர் யார் வாக்களிக்கிறார் என்பதை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரஜினியோ; தன் அருகில் இருந்தவர்களை பார்த்து தூரமாக போகும்படி வேண்டிக்கொண்டார். மேலும் வீடியோ எடுக்க முற்பட்டவர்களையும் தடுத்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
யாருக்கு ஆதரவு?: ரஜினியை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் திமுகவுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத்தான் அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. பரப்புரையின்போது அவரும், கமலும் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிய வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவின. போதாக்குறைக்கு தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, 'ரஜினியை திமுக மிரட்டியது. அதனை தாங்கும் மன வலிமை அவருக்கு அப்போது இல்லாமல் போய்விட்டது' என கூறியிருந்தார்.
களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்: அதை பார்த்து கடுப்பான ரஜினி ரசிகர்கள் விஜய், ஆதவ் அர்ஜுனாவை கிழித்தெடுத்துவிட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் அந்த விஷயத்தில் ஆதவ்வுக்கு எதிராக கருத்து பொழிந்தார்கள். விஜய்யோ இந்த விஷயத்தில் கடைசிவரை அமைதியாகவே இருந்தார். ரஜினிகாந்த்தும் தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். நிலைமை கை மீறி போவதை உணர்ந்த ஆதவ் அர்ஜுனா; ரஜினியிடம் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications