100 கோடி ஏன் வாங்குறீங்க.. ரஜினியிடமே அந்த கேள்வியை கேட்ட தமிழருவி மணியன்.. விஜய் மீதும் கோபம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்கு அழைத்து வந்து அவரை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்து விடாத என பல ஆண்டுகள் காத்துக் கிடந்த தமிழருவி மணியன் ரஜினிகாந்த் இப்போதெல்லாம் ஏன் இப்படி நடிக்கிறீங்க என அவரிடமே கேட்டு விட்டு வந்ததாக பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
முடக்கறுத்தான் பட விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழருவி மணியனை அழைத்துள்ளனர். அந்த படத்தின் டீசரை பார்த்து விட்டு என்னங்க நீங்களும் சம்மட்டி எடுத்து மண்டையில் அடிப்பது போன்ற காட்சிகளை வைத்துள்ளீர்கள் என மேடையிலேயே படக்குழுவினரை நெளிய வைத்து விட்டார்.

சினிமா நடிகர்கள் சமீப காலமாக மோசமான படங்களை கொடுத்து வருகின்றனர் என்றும் அதனால் பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தமிழருவி மணியன் அடித்து நொறுக்க அனைவருமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டனர்.
100 கோடிக்கு மேல் சென்ற சம்பளம்: பல ஹாலிவுட் நடிகர்களே 100 கோடி சம்பளம் வாங்காத நிலையில், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் 100 முதல் 200 கோடி வரை தங்கள் சம்பளத்தை உயர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகர்களின் சம்பளம் பற்றியும் 300 கோடிக்கு மேல் பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் பற்றியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் தமிழருவி மணியன்.
ரஜினியிடமே கேட்டேன்: இந்த ஆண்டு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ள நிலையில், அவரிடமே போய் கேட்டு விட்டேன். ஏன் இப்படி ஆக்ஷன் படங்களாக பண்ணுறீங்க.. ஒரு ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் மாதிரி எல்லாம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பண்ண மாட்டீங்களா என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
விஜய் மீதும் கோபம்: நடிகர் விஜய்யின் லியோ படத்திலும் அவர் சம்மட்டியை தூக்கி அடிக்கிறாரு. இந்த படத்திலும் அப்படியொரு காட்சி ஏன் என வீரபாபுவிடம் கேட்டேன் என்ற தமிழருவி மணியன் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் தான் விஜய்க்கு எந்த காலத்திலும் நல்ல படங்கள் வரிசையில் நிற்கும் இதெல்லாம் நிற்காது. ஆபாச வசனங்கள், வரம்பு மீறிய சண்டைக் காட்சிகள், அதிகமான விரச காட்சிகளை வைத்து தமிழ் சினிமாவையே கெடுத்து வருகின்றனர் என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார்.
சினிமாவை சரியா பயன்படுத்திய எம்ஜிஆர்: பாமர மக்கள் வரை சென்று சேரக்கூடியது சினிமா தான் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டு ஒரே பாட்டு மூலம் திரவிடத்தை தமிழ்நாடு முழுவதும் பரப்பி முதலமைச்சராகவும் ஆட்சியை பிடித்த ஒரே மகத்தான நடிகர் எம்ஜிஆர் தான் என்றும் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என பாடல் வைத்தே தனது அரசியல் பிரச்சாரத்தை செய்தவர் எம்ஜிஆர் என தமிழருவி மணியன் பேசியுள்ளார்.
மேலும், அந்த காலத்தில் வெளியான பாசமலர், பாவ மன்னிப்பு உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் இன்றைக்கு இல்லாமல் இரைச்சலே இசையாகி போய் விட்டது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என எந்தவொரு சமரசமும் இன்றி அவர் பேசியுள்ள பேச்சு தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











