விழுப்புரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 வகை சீர்வரிசையுடன் இலவச திருமணம் நடத்தி வைத்த விஜய்

நடிகர் விஜயின் விழுப்புரம் மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கராபுரம், முகையூர், சின்னசேலம், வானூர், ரிஷிவந்தியம், செஞ்சி, மேல்மலையனூர், திருநாவலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இலவச திருமண விழா விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை நடந்தது.
திருமணத்தை நடத்தி வைக்க விஜய் நேற்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தார். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் விஜய் 11 ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து வாழ்த்தி அவர்களுக்கு 51 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
என்னடா இந்த விஜய் திடீர்னு விழுப்புரம் வந்து இலவச கல்யாணம் எல்லாம் செய்து வைக்கிறார். எதிர்காலத்தில் ஏதாவது திட்டம் இருக்குமோ என்று யாரும் தப்பா நினைத்து ஏதாவது கணக்கு போட வேண்டாம். இது போன்ற இலவச திருமணத்தை 2 மற்றும் 1 மாதத்திற்கு ஒரு முறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருகிறேன். இதற்கு முன்பு ஓசூர், வேலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும் இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளேன். இதற்கான ஏற்பாடுகளை என்னுடைய மாவட்ட நண்பர்கள் செய்கின்றனர்.
நான் சென்னையில் ஆண்டுதோறும் இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறேன். என் தங்கை வித்யா புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறாள். இங்குள்ள 11 ஜோடிகளும் 16 செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











