ரஜினிக்கும் எனக்கும் பொறாமை கிடையாது.. விஜய் ஆட்சி எப்படி இருக்கு?.. கமல் பளிச்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மீது தனக்கு பொறாமை இல்லை என்றும்; கமல் வென்றிருந்தால்கூட எனக்கு பொறாமை வந்திருக்காது என்றும் தெரிவித்தார். மேலும், விஜய் வெற்றி பெற்றதுமே அவருக்கான வாழ்த்தை நான் கூறிவிட்டதாகவும் சொன்னார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் கருத்து குறித்து கமல்ஹாசனும் தன் விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து ரஜினியிடமிருந்து அவருக்கு வாழ்த்து வரவில்லை; விஜய் சி.எம் ஆனது ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் அமைதி காக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. சூழல் இப்படி இருக்க இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது பேசிய அவர், "விஜய் மீது எனக்கு பொறாமையே இல்லை. அவரையும், என்னையும் ஒப்பிடுவதே தவறு. இரண்டு கட்சிகளை பின்னுக்கு தள்ளி தனித்து நின்று அவர் வென்றதை ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு பார்க்கிறேன்.

தரங்கெட்ட ஆள் இல்லை: விஜய் முதலமைச்சரானது எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். மேலும் திமுக - அதிமுகவை இணைக்க நான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொன்னார்கள். அந்த அளவுக்கு நான் தரங்கெட்ட ஆள் இல்லை. நான் மட்டும் கட்சி தொடங்கியிருந்தால் கண்டிப்பாக 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேன். அது நூறு சதவீதம் உண்மை. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆகியிருந்தால்கூட நான் பொறாமைப்பட்டிருக்க மாட்டேன். விஜய்க்கு இரண்டு வருடங்களாவது கால அவகாசம் கொடுங்கள்.
பூர்த்தி செய்வார்: அவர் மீது மக்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அவர் கண்டிப்பாக பூர்த்தி செய்வார். விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் சிறிய தவறு செய்தாலும்கூட அது விஜய்யைத்தான் பாதிக்கும். எனவே அவர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்" என்றார். ரஜினியின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தேவையில்லாத பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
கமலின் ரியாக்ஷன்: அதற்கு பதிலளித்த அவர், "எனக்கும், ரஜினிக்கும் போட்டி இருந்திருக்கிறது. பொறாமைப்பட்டது இல்லை. சினிமா துறையில் மட்டுமில்லை கிரிக்கெட் விளையாடினாலும் இப்படித்தான் இருந்திருப்போம். சில கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்திருக்கிறேன். விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது என இரண்டே நாட்களில் சொல்ல வேண்டுமென்றால் அது ஜோசியத்தால் மட்டும்தான் முடியும். புதியவர்களை இங்கே குறைவாக எடை போட முடியாது. ஏனெனில் சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவுக்கு எல்லோருமே புதியவர்கள்தான். வாக்களித்தவர்கள்தான் கவனித்து நன்றாக ஆட்சி செய்கிறாரா என்று சொல்ல வேண்டும்" என்றார்.
கமலின் கரியர்: முன்னதாக, கமலும், ரஜினியும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். அந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க; நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார். விரைவில் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
