எனக்கு கேன்சர் வந்தபோது.. அதை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.. சிவராஜ்குமார் ஓபன்
சென்னை: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் சிவராஜ்குமார். தமிழில் அவர் கேப்டன் மில்லர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ராம்சரண் நடித்திருக்கும் பெத்தி திரைப்படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். நேற்று நடந்த அப்படத்தின் விழாவில் சிவராஜ்குமார் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரல் தீயை பற்ற வைத்திருக்கிறது.
கன்னட திரையுலக ஜாம்பவன் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவரது சகோதரர் புனித் ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அவர் சென்றதிலிருந்து அவருக்கான பெருமையை காப்பாற்றும் பொறுப்பு மூத்தவரான சிவராஜ்குமாருக்கு வந்தது. கன்னடத்தில் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவரை சிவா அண்ணா என்று வாஞ்சையோடு அழைப்பார்கள் ரசிகர்கள். அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கும் பலர் அந்த மாநிலத்தில் இருக்கிறார்கள்.

தமிழ் மீது மதிப்பு: கன்னடத்தில் பெரிய ஜாம்பவான்கள் வரிசையில் இருந்தாலும்; சிவராஜ்குமாருக்கு தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மதிப்பு அதிகமாகவே இருக்கும். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் மீது தனி பாசம் வைத்திருக்கிறார். அதனை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த ஜெயிலர் படத்தில் நடித்தார். அதில் சிறிய அளவிலான கேமியோ ரோல் செய்தாலும் அவர் ஸ்க்ரீனில் வரும்போது தியேட்டரில் தீ பரவியது என்றுதான் சொல்ல வேண்டும்.
கேன்சரால் பாதிப்பு: ஜெயிலர் கொடுத்த கிரேஸின் பலனாக கேப்டன் மில்லர் படத்திலும் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. இருப்பினும் இவர் தன்னுடைய ரோலை மிக சிறப்பாகவே செய்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு புற்றுநோய் வந்தது. சில வருடங்களுக்கு முன்பு அந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர்; அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார். அவர் சென்றபடியே மீண்டும் வந்தது அவரது ரசிகர்களிடையே பெரிய விழா போன்று கொண்டாடப்படுகிறது.
பெத்தி படத்தில் சிவராஜ்குமார்: கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் புச்சி பாபு இயக்கத்தில் ராம்சரண் நடித்திருக்கும் பெத்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதிலும் அவருக்கு முக்கியமான ரோல் என்றே கருதப்படுகிறது. தமிழில் எப்படி ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் கலக்கினாரோ அதேபோல் தெலுங்கிலும் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். ஜூன் நான்காம் தேதி இந்தப் படமானது தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
சிவராஜ்குமார் பேச்சு: இந்நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. அந்தவகையில் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ்குமாரும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பெத்தி கதையை இயக்குநர் என்னிடம் சொன்னதுமே பிடித்துவிட்டது. உடனே நான் ஓகே சொல்லிவிட்டு ராம்சரணிடமும் பேசிவிட்டேன். அந்த நிலைமையில்தான் கேன்சர் நோய் வந்தது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என்னை இந்தப் படத்திலிருந்து விலக்கிவிடுங்கள் என கேட்டிருந்தேன். ஆர்கள் அப்படி செய்யவில்லை. எனக்காக பொறுமையுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
