விஜய் ஒரு சிங்கம்.. கலாய்த்ததால் வினை.. தம்பி ராமைய்யா மகன் கொடுத்த ஸ்டேட்மெண்ட்.. துணைக்கு வந்த தந்தை
சென்னை: இயக்குநரும், நடிகருமான தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி. அர்ஜுனின் மகளை திருமணம் செய்திருக்கும் அவர் இப்போது TN 2026 என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதில் நட்டி, தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் வெளியான டீசர் வெளியானது. அதில் விஜய்யையும், அவரது அரசியல் பிரவேசத்தையும், அவருடன் இருப்பவர்களையும் கலாய்க்கும்படியான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வருபவர் தம்பி ராமைய்யா. அவர் இயக்குநராக இருந்தாலும் நடிகராகத்தான் அடையாளப்பட்டார். அவரது மகன் உமாபதி சில படங்களில் நடித்தார். அது செட்டாகவில்லை. ராஜாக்கிளி என்ற படத்தை இயக்கவும் செய்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி படுதோல்வியடைந்தது. இது ஒருபக்கம் இருக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். எப்படியாவது திரைத்துறையில் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்.

தந 2026: இப்போது அவர் நட்டி நட்ராஜ், தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரை வைத்து TN 2026 என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். ஏப்ரல் பத்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு படத்துடைய ட்ரெய்லர் வெளியானது. அதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யையும், அவரது அரசியல் பிரவேசத்தையும், அரசியல் களத்தில் அவருடன் பயணிக்கும் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரையும் கலாய்க்கும்படியான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
டென்ஷனான விர்ச்சுவல் வாரியர்ஸ்: அதனைப் பார்த்து தவெகவினர் கொதித்து போனார்கள். ஒரு சிலரோ வழக்கம்போல், திமுக தரப்புதான் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து இப்படி படம் எடுக்க சொல்வதாக உருட்டினார்கள். பெரும்பாலானோர் இந்தப் படத்தை வைத்து செய்துவிட வேண்டும் என்ற சபதத்தோடு சேதமடைய செய்தார்கள். ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஒரு பிரச்னை முளைத்திருப்பது படத்துக்கு விளம்பரம்தான் என்றாலும்; இது சமயங்களில் ஆப்பு அடித்துவிடும் எனவும் கருதப்படுகிறது.
விளக்கமளித்த உமாபதி: விர்ச்சுவல் வாரியர்ஸ் இயக்குநர் உமாபதி உள்ளிட்டோரை தரக்குறைவாக பேச தொடங்கிவிட்டார்கள். அதுதான் அவர்களது ஒரே ஆயுதம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய உமாபதி, "படத்தில் நிறைய கெட் அப் இருக்கிறது. யாரையோ நாங்கள் கலாய்த்திருப்பதாக சொல்கிறார்கள். இது ஒரு அரசியல் படம். நாங்கள் கலாய்த்ததாக சொல்லப்படும் நபர் (விஜய்) சிங்கம். சிங்கத்தை யாரும் கலாய்க்க முடியாது" என்றார்.
தம்பி ராமைய்யா பேச்சு: அவரைத் தொடர்ந்து தம்பி ராமைய்யா பேசுகையில், "தவெக தலைவர் விஜய்யோடு நான் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். நட்டி இரண்டு படங்களில் கேமரா மேனாக வேலை பார்த்திருக்கிறார். டீசரில் வந்த சிறு பகுதியை பார்த்துவிட்டு இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோ என பேசுகிறார்கள். எனது வயதுக்கு பொய் சொல்லமாட்டேன். தம்பி ஆதவ் அர்ஜுனா அவர்களே நீங்கள் சங்கடப்படும் அளவுக்கு இந்தப் படம் நூல் அளவுகூட இருக்காது" என்று குறிப்பிட்டார். அதேபோல் நட்டி பேசுகையில், "விஜய் எப்போது கூப்பிட்டாலும் நானும், எங்கள் டீமும் நேரில் சென்று விளக்கம் கொடுக்க ரெடிதான். நான் அவருக்கு ஃபோன் செய்ய முடியாது. அவர் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications















