டோவினோ தாமஸின் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை வெளியிட தடை.. சிக்கலில் படக்குழு!
சென்னை: மலையாள நடிகர் டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் தொடுத்த வழக்கின் பேரில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ்: தற்போது இவர், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த படத்தை சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குநர் ஜித்தின் லால் இயக்கி உள்ளார். 'அஜயந்தே ரண்டம் மோஷனம்'. டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி. இவர்களைத் தவிர்த்து பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
அஜயந்தே ரண்டம் மோஷனம்: இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டின் காரைக்குடியை ஒட்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் நம் மனதில் இடம் பிடித்த டோவினோ தாமஸ் 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் மலையாளம் தவிர தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. படத்தை மே மாதம் வெளியிட இருந்த நிலையில் படத்தின் விஎபக்ட் பணிகள் தாமதமானதால், படத்தை ஓணம் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
நீதிமன்றம் தடை: இந்நிலையில், எர்ணா குளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சிச் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், படத்தை தயாரிக்க தன்னிடம் ரூ. 3.20 கோடியை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த கொச்சி நீதிமன்றம், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி முடிவால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகை கீர்த்தி ஷெட்டி முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகமாகி உள்ள படம், வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவர் வேதனை அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











