தம்மடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கும்பகோணம் வந்தார். அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள் விழாவில் பங்கேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "சினிமாவில் சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். புகைப் பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். குடிப்பது போன்ற காட்சிகளைக் கூட தவிர்க்க முயற்சிக்கிறேன்.
வித்தியாசமான கதைகளுக்காக காத்திருக்கிறேன். ஜனரஞ்சகமான, காமெடி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எனது நடிப்பில் குறைகள் இருக்கலாம். அதை என்னிடம் தாராளமாக சொல்லுங்கள். எனக்கேற்ற மாதிரி வித்தியாசமான ஆக்ஷன் படங்களிலும் நடிப்பேன். அட வில்லன் ரோலாக வந்தாலும் வித்தியாசமாக இருந்தால் நடிக்க ஆசை.
எனக்கு எல்லா இயக்குநர்களும் பிடிக்கும். ஆனாலும் ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும். வடிவேல் நல்ல நண்பர். அவருடனும் சேர்ந்த நடிக்க விரும்புகிறேன்," என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
தமிழில் முதல் இடத்தைப் பிடித்த 6 மாணவ - மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.


Click it and Unblock the Notifications











