Vadivelu: தனித்து விடப்பட்ட வடிவேலு.. ஒருமையில் பேசிய ட்ரம்ஸ் சிவமணி.. பேட்டரி காரில் பட்டபாடு
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். முன்னர் அவருக்கு இருந்த பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டாலும் இப்போதும் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்கூட தெரிவிக்காதது. வடிவேலு அவ்வாறு நடந்துகொண்டது பெரும் கண்டனத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. கவுண்டமணியும், செந்திலும் பீக்கில் இருந்தபோது அவர் உள்ளே வந்ததால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது. கவுண்டமணிக்கு வடிவேலுவின் வருகை சுத்தமாக பிடிக்கவில்லை என்ற பேச்சு பல காலமாகவே சினிமாவில் உண்டு. ஒருவழியாக வடிவேலு தனது திறமையை வளர்த்து படிப்படியாக உயரத்துக்கு செல்ல ஆரம்பித்தார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட படங்கள் புக்காகின. ஒருகட்டத்தில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை உருவானது.

அவர் கால்ஷீட்டை வாங்குங்க: சந்திரமுகி படத்தின்போது பி.வாசுவிடம் ரஜினிகாந்த், 'முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள்' என்று சொல்லும் அளவுக்கு வடிவேலு படுபிஸியாக இருந்தார். படத்துக்கு வாங்கிய சம்பளம் நிலை சென்று ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் என்று வடிவேலு ஃபிக்ஸ் செய்யும் அளவுக்கு உயர்ந்தார். ஏனெனில் வடிவேலு நடித்தால் போதும் அந்தப் படம் ஹிட்டாகிவிடும். பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என அனைவருடனும் நடித்து ஒவ்வொரு படத்துக்கும் வெரைட்டி காண்பித்தார்.
ஒதுக்கப்பட்ட வடிவேலு?: இப்படி அவரது கரியர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கும், விஜயகாந்த்துக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அரசியல் மேடை ஏறி விஜயகாந்த்தை தரக்குறைவாக பேசினார். திமுக மேடைகளில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்தது. ஆளும் கட்சியான திமுக மீது அதிருப்தி இருந்தது. எனவே வடிவேல் பிரச்சாரம் துளியும் எடுபடவில்லை.
சூழல் இப்படி இருக்க 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆளுங்கட்சியாக அதிமுகவும், எதிர்க்கட்சியாக தேமுதிகவும் வந்தன. இனியும் வடிவேலுவை வைத்து படம் செய்தால் கண்டிப்பாக பிரச்னை வரும் என்று பயந்த திரைத்துறையினர் கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலுவை ஒதுக்கினார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் வடிவேலு செய்த சில பிரச்னைகள்தான் அவர் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் என்றும் ஒருதரப்பினர் சொல்வார்கள்.
ரீ என்ட்ரி: ஒருவழியாக அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் வடிவேலு. அதனையடுத்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டானது. வடிவேலுவின் நடிப்பும் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு.
மீண்டும் சர்ச்சை: நிலைமை இப்படி இருக்க வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சர்ச்சைகள் ஏற்பட தொடங்கியிருக்கின்றன. அவருடன் பணியாற்றியவர்கள் ஒருபக்கம் வடிவேலு மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். அவரது நடவடிக்கைகளும் அவருக்கு கண்டனத்தை பெற்று தருகின்றன. வடிவேலுவின் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான விஜயகாந்த்தின் மரணத்துக்கு நேரில் வரவில்லை வடிவேலு. சரி நேரில் வந்தால்தான் பிரச்னை; இரங்கல் தெரிவிப்பார் என்று நினைத்தால் அதனையும் அவர் செய்யவில்லை. இதனால் அவருக்கு எதிராக பலரும் திரும்பியிருக்கின்றனர். வடிவேலு மாதிரி நன்றி கெட்டவர் யாரும் இல்லை என பலரும் ஓபனாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவமானம்: இந்நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் கலைஞர் 100 விழா திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேலு உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு உரையாற்றினார். ஸ்டாலின் கிளம்பியதும் ஒவ்வொருவராக கிளம்ப தொடங்கினர். அப்போது அவர்கள் அரங்கிலிருந்து தங்களது கார் வரை செல்வதற்கு வசதியாக பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டன.
அப்போது வடிவேலுவுக்காக நின்ற காரில் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தனது குடும்பத்தினருடன் ஏறிக்கொண்டார். அதனை கவனித்த அங்கிருந்தவர்கள், இது வடிவேலுவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்று சொன்னார்கள். அதற்கு சிவமணியோ, 'அவன்லாம் ஒரு ஆளா' என ஒரே போடாக போட்டு காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். அதனையடுத்து வந்த காரில் வடிவேலு அமர; பார்த்திபன் ஏறி பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார். அந்த சமயத்திலும் வடிவேலுவிடம், நீங்கள் பின்னால் வரும் காரில் வாருங்களேன் என சிலர் சொல்ல அதை ஏற்றுக்கொண்ட அவர், இறங்கி அடுத்து வந்த காரில் அமர்ந்து சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் வடிவேலு மூத்த கலைஞர்களில் ஒருவர். மேலும் திரையுலகினர் மத்தியில் மதிப்புடன் இருந்தவர். ஆனால் கலைஞர் 100 விழாவில் அவர் இப்படி நடத்தப்பட்டதை பார்த்த ரசிகர்கள், வடிவேலுவுக்கு இது தேவைதான். தன்னை வளர்த்துவிட்டவர்களை அவமானப்படுத்தினால் இந்த மாதிரிதான் நடக்கும். விஜயகாந்த்தின் சாபம் கண்டிப்பாக அவரை துரத்திக்கொண்டே இருக்கும். இனியாவது வடிவேலு தனது தவறை புரிந்துகொண்டு தலைக்கனத்தோடு நடக்கக்கூடாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











