என்னது அஜித்துக்கு நான் போட்டியா?.. அவர் ஒரு உச்சம்.. மனம் திறந்த வணங்கான் அருண் விஜய்
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் அஜித். அவரது கைவசம் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. முக்கியமாக விடாமுயற்சி படம் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்ட சூழலில் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை என்பது அஜித்தின் ரசிகர்களுக்கு பெரும் சோகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அஜித் பற்றி அருண் விஜய் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் விக்னேஷ் சொன்ன கதையின் இரண்டாவது பாதி திருப்தி தராததால் அந்தப் படத்தை செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார் அவர். அதனையடுத்து மகிழ் திருமேனி உள்ளே வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டு அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் தொடங்கி நடந்தது.

தாமத விடாமுயற்சி: அங்கு ஷூட்டிங் தொடங்கினாலும் படப்பிடிப்பு என்னவோ ஆமை வேகத்தில்தான் நடந்தது. அதற்கிடையே ஆர்ட் டைரக்டர் மிலனின் மரணம், ஒளிப்பதிவாளர் மாற்றம் என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தன. பிறகு ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பியது படக்குழு. ஆனால் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது, ரிலீஸ் எப்போது என்பதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை. அவ்வப்போது ரிலீஸ் பற்றிய தகவல் மட்டும் வந்துகொண்டிருக்கிறது.
குட் பேட் அக்லி: விடாமுயற்சியின் நிலைமை இப்படி இருக்கும்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் ஏகே. இதனால் விடாமுயற்சியை அஜித் விட்டுவிட்டாரோ என்று ரசிகர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை ஒரே நேரத்தில் அஜித் இரண்டு படங்களிலும் நடித்துவருகிறார். பல வருடங்களுக்கு அஜித்குமார் இந்த ஃபார்முலாவுக்கு வந்திருப்பதாக அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தெரிவித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
விறுவிறு ஷூட்டிங்: இப்போது இரண்டு படங்களின் ஷூட்டிங்கிலும் தவறாமல் கலந்துகொள்கிறார் ஏகே. இந்த இரண்டு படங்களில் குட் பேட் அக்லி அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது. சூழல் இப்படி இருக்க அன்றைய தினம்தான் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வணங்கான் படமும் ரிலீஸாகவிருக்கிறது. எனவே அஜித்துக்கு போட்டியாக அருண் விஜய் களத்தில் குதித்துவிட்டார் என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
அவர் ஒரு உச்சம்: ஆனால் அதனை அருண் விஜய் மறுத்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நீங்கள் அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு களமிறங்குகிறீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அருண் விஜய், “அஜித்துக்கு நான் போட்டி என்று யார் சொன்னது. அவர் ஒரு உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர். அவருடைய ரசிகர்களும் என்னை அவ்வளவு விரும்புகிறார்கள்” என்றார். முன்னதாக அருண் விஜய் சினிமாவில் தடுமாறிக்கொண்டிருந்தபோது அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து தனது கரியரை ரீ ஸ்டார்ட் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











