12 ஏக்கர் நிலம்.. மருத்துவமனை கட்டுகிறாரா ரஜினிகாந்த்.. ஏழைகளுக்கு இலவசமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னையில் மருத்துவமனை கட்ட முடிவு செய்து 12 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும், அதற்கான பத்திரப்பதிவு பிப்ரவரி 29ம் தேதி நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் இந்த முடிவு அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமா ரசிகர்களின் முதல் சாய்சாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் முன்னணியில் இருக்கும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்காக 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த இந்த படத்தால், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவாகி விட்டார்.

வேட்டையன்: தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதால், வேட்டையன் படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. இந்தப் படம் இந்தாண்டு மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஏக்கர் நிலம்: இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த்,12 ஏக்கர் நிலத்தை இலவச மருத்துவமனை கட்ட வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது OMR சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தினை ரஜினிகாந்த் வாங்கி உள்ளார். இதற்காக திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது. ரஜினி வரும் தகவல் தெரிந்த ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்து இருந்தனர். அவர்களை பார்த்த ரஜினி சிரித்தபடி கைகளை அசைத்து சென்றார்.
இலவச மருத்துவமனை: மேலும், பத்திரப்பதிவு நடந்த இந்த 12 ஏக்கர் நிலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏழைகளிடம் பணம் வாங்காமல் நல்ல தரமான மருத்துவம் கொடுக்க இருப்பதாகவும். அதே நேரம், வசதியானவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டே சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள தனக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவரை ரஜினி நியமிக்க உள்ளதாகவும், மருத்துவமனை கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











