'இல்ல இல்ல... நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கல, அரசியல் பேசல!' - விஜய் அவசர மறுப்பு

சமீபத்தில் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை வெளிமாநிலத்தில் ரகசியமாகச் சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தினார் விஜய் என தகவல் வெளியானது. இது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிடப்பட்டது.
இப்போது இதுகுறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன்.
நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











